"காய்கறி வாங்க கடன் வேண்டும்....." வங்கியில் கடன் கேட்டு நூதன முறையில் போராட்டம்....

By Raghupati RFirst Published Nov 26, 2021, 9:00 AM IST
Highlights

காய்கறி வாங்க கடன் வேண்டும் என்று வங்கியில் மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு தொழில்சங்கத்தினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்காவில் காய்கறி வாங்க கடன் வேண்டும் என்று  போராட்டத்தில் ஈடுபட்டனர்  சி.ஐ.டி.யு தொழில்சங்கத்தினர்.இதுகுறித்து அவர்கள் பேசிய போது, ‘மேட்டுப்பாளையம் உட்பட்ட பகுதிகளில் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.அவர்களுக்கு அன்றாடம் கிடைக்கும் கூலி வேலைகள் மற்றும் சிறு வியாபாரங்கள் செய்து அதில் கிடைக்கும் சிறு வருவாயைக் கொண்டு அவர்களது குடும்பங்களையும் குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறார்கள். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்று காலகட்டத்தில் அவர்கள் வேலை உள்ளிட்ட சிறு தொழில்கள் செய்ய முடியாமல், சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகிவிட்டார்கள்.

இந்நிலையில்,  தமிழக அரசு மற்றும்  மாவட்ட நிர்வாகத்தின் பெருமுயற்சியால் கொரோனா பெரும் தொற்று படிப்படியாக குறைந்து அவர்களது இயல்பு வாழ்வு தற்போது சிறுக சிறுக சரியாகி வருகிறது. இந்த நிலையில் ஏழை எளிய கூலி தொழிலாளர்களின் தலையில் விழுந்த பெரும் இடியாக,  தக்காளி உள்ளிட்ட காய்கறி மற்றும் அத்தியாவசியமான பொருட்கள் கடும் விலை ஏற்றமாக உள்ளது.  

இதனால் அவர்களுக்கு கிடைக்கும் சொற்ப வருவாயில், தக்காளி உள்ளிட்ட காய்கறி போன்ற அன்றாடும் உணவுகளுக்கு அத்தியாவசியமான பொருட்களை வாங்கி அவர்களது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான உணவு பொருட்களை வழங்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரணமாக விலைவாசி விற்கும் போது கூட, அதிகமாக உணவுப்பொருட்கள் வாங்க முடியாத நிலை அவர்களுடையது. உணவுப் பொருட்கள் விலை ஏற்றத்தினால் அவர்களது குழந்தைகள் உணவுப் பொருட்களைப் பார்க்கும், வெறும்  பார்வையாளராக மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

ஆகவே அவர்களது குழந்தைகளுக்கும், அவர்களுக்கும்  தக்காளி போன்ற ஊட்டச்சத்தான உணவுப் பொருட்களை வாங்கி கொடுப்பதற்கு தயவுகூர்ந்து தங்கள் வங்கியில் இருந்து ரூபாய் 20,000 கடனுதவி வழங்கி உதவி செய்யுமாறு வேண்டுகிறோம். இந்தக் கடனை வட்டியுடன் மாதம் மாதம் சிறுக சிறுக கடனை அடைத்து விடுவதற்கும் தயாராக உள்ளார்கள் அவர்கள். ஆகவே தயவு கூர்ந்து ஏழை எளிய தொழிலாளர்கள் உயிர் வாழவும் அவர்களது குழந்தைகளை பாதுகாக்க அவர்களது விண்ணப்பத்தை பரிசீலித்து அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் கடன் உதவி வழங்குமாறும் வங்கி அதிகாரியிடம் கேட்டுக்கொண்டோம் என்றனர்.

click me!