திருவாரூரில் நடைப்பெற்ற சைல்டுலைன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புத் தேவைக்கு 1098 அழையுங்கள் என்று ஜீவானந்தம் தெரிவித்தார்.
நீடாமங்கலம் கடைத் தெருவில், திருவாரூர் மாவட்ட சைல்டுலைன் சார்பில் 1098 குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வர்த்தகர் சங்கத் தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். ஆட்டோ சங்கத் தலைவர் பக்கிரிசாமி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில், சைல்டுலைன் 1098 குறித்த விழிப்புணர்வு பதாகைகள் கட்டப்பட்ட ஆட்டோக்களின் ஊர்வலத்தை நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் அறிவழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட சைல்டுலைன் இயக்குநர் ஜீவானந்தம், “18 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புத் தேவைக்கு உதவிட மத்திய அரசின் பெண்கள், குழந்தைகள் அமைப்பின் அமைச்சகம் திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செயல்படும் 24 மணிநேர 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்” என்றுத் தெரிவித்தார்.
இதில் நீடாமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் மகாலட்சுமி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குஞ்சுதபாதம் சைல்டுலைன் 1098 பணியாளர்கள் ரமேஷ்குமார், காந்திமதி மற்றும் வர்த்தகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.