
மதுரையில் மன நிலை தடுமாறி, விபரீத முடிவு தேடும் மாணவர்களின் வாழ்க்கை திசை மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை நடந்த இரு வெவ்வேறு சம்பவங்கள் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பிளஸ் 1 படித்த மாணவர், தான் படிக்கும் பள்ளியில் 'ஸ்கேட்டிங்' விளையாட்டை தேர்வு செய்ய வேண்டும் என விரும்பியுள்ளார். அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
இதேபோல், கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர், டூவீலர் ஓட்டிச் சென்றபோது 55 வயதுமிக்க பெரியர் ஒருவர் மீது இலேசாக மோதியுள்ளார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பக்குவமில்லாத மனநிலையில் இருந்த அந்த மாணவர், அவரை பழிவாங்க வீட்டிற்குச் சென்றுக் கத்தியை எடுத்து வந்து கண்டித்த நபரை குத்தி 'கொலைக்காரன்’’ பட்டம் பெற்றார்.
இவ்விரு சம்பவங்களும் ஆரோக்கியமான சமுதாய சூழலுக்கான எண்ணம் மாணவர்களுக்கு இல்லை என்பதை நன்கே உணர்த்துகிறது என்பதில் சந்தேகம் இல்லை என்கின்றனர் உளவியலாளர்கள்.
மதுரை அரசு மருத்துவமனை மனநிலை மருத்துவர் குமணன், “இரு மாணவர்களும் வளரும் இளம் பருவத்திற்கு உட்பட்டவர்கள். பக்குவம் அடையும் இந்த வயதில் உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படும். உளவியல் ரீதியாக இவர்கள் எந்த எதிர்ப்பும், கட்டுப்பாடும் நமக்கு இருக்கக்கூடாது என நினைக்கின்றனர்.
இதற்கு சமுதாயம் மற்றும் குடும்ப சூழலும்தான் காரணம். முன்பு பள்ளியில் தவறு செய்யும் மாணவர் தண்டிக்கப்பட்டார். அவருக்கு பயம் இருந்தது. ஆசிரியர்கள் மீது மரியாதையும் இருந்தது. ஒழுக்கம் வளர்ந்த ஆரோக்கிய சமுதாயமாக இருந்தது. இப்போது அதுபோன்ற சூழல் இல்லை.
குடும்ப ரீதியாக 'ஒரு குழந்தை பெற்றோர்' அந்த குழந்தைக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்ப்பதும் போன்ற காரணங்கள்தான் இதற்கான தொடக்கப் புள்ளியே. குழந்தைகளை பெற்றோர் வளர்க்கும் முறையில் மாற்றம் வேண்டும். மாணவர்களின் செயல்பாட்டிற்கு பெற்றோர்தான் பொறுப்பு” என்று தெரிவித்தார்.