
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து விஜய் இன்று தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் தவெகவைச் சேர்ந்த 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்திய சட்டத்தின் அடிப்படையில் ஒருவர் இரு தொகுதிகளில் போட்டியிடலாம். ஆனால் ஒரு தொகுதியில் மட்டுமே உறுப்பினராக நீடிக்க முடியும். அந்த வகையில் விஜய் திருச்சி கிழக்கு அல்லது பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் ஒன்றில் அவர் ராஜினாமா செய்யவேண்டிய கட்டாயம் உருவானது.
அந்த வகையில் அவர் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துள்ளார். பெரம்பூர் தொகுதியில் சென்னை நகரத்திற்குள் இருப்பதால் அங்கு அடிக்கடி சென்று பணி செய்ய வசதியாக இருக்குமென்பதால் பெரம்பூர் தொகுதியை விஜய் தக்கவைத்துக் கொண்டார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்பதற்கு முன்னர் திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தினை இன்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கடரமணன் ஆகியோர் சந்தித்து சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் சீனிவாசனிடம்” வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தொகுதியில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய நிலையில் அவர் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடலாமென சொல்லப்படுகறது. அதே போன்று தவெக சார்பில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் இந்த தொகுதியில் களம் இறக்கப்படலாமென சொல்லப்படுகிறது.