
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இளையராஜா சென்றபோது, அவரை ஜீயர்கள் வெளியே அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அறநிலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருக்கோயில் செயல் அலுவலர் அளித்துள்ள அறிக்கையை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. அதில், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 46(ii)- ன் கீழ் உள்ள திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயிலானது முதல் நிலை செயல் அலுவலர் மற்றும் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட அறங்காவலர் குழு கூட்டுப் பொறுப்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் (15.12.2024 ) நேற்று இத்திருக்கோயிலுக்கு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் சுவாமி தரிசனத்திற்கு திருக்கோயிலுக்கு வருகை புரிந்தனர். இத்திருக்கோயிலில் ஆண்டாள் ரெங்கமன்னார். கருடாழ்வார். மூலவர் கருவறையிலும், கருவறையினை அடுத்த அர்த்த மண்டத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார். கருடாழ்வார் உற்சவரும் எழுந்தருளியுள்ளனர். எனவே. இத்திருக்கோயில் மரபு படியும், பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை திருக்கோயிலின் அர்ச்சகர். பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை என்றும் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
மேலும் 15.12.2024 அன்று இசையமைப்பாளர் இளையராஜா, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உடன் வருகை புரிந்த போது அவருடன் இணைந்து அர்த்த மண்டப வாசல் படி ஏறிய போது உடன் இருந்த ஜீயர் சுவாமிகள் மற்றும் திருக்கோயில் மணியம் அர்த்த மண்டபம் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்யலாம் எனக் கூறினார்.
உடனே அவரும் ஒப்புக் கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார் என்றும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மட்டும் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார் என்ற விவரம் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.