தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 'நீட்' நுழைவுத் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கக் கோரும் அவசர சட்ட வரைவு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் இன்று ஆய்வு செய்கிறது.
'நீட்' அவசர சட்ட வரைவுக்கு ஒப்புதல் பெற சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் டில்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் மத்திய சுகாதாரத்துறை, உள்துறை மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகளை இன்று சந்தித்து, கூடுதல் ஆவணங்கள் வழங்குகின்றனர்.
மேலும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளும் சட்ட வல்லுனர்களும் தமிழக அரசின் சட்ட வரைவு அம்சங்களை இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
மத்திய சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை பெற்ற பின் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு தமிழக அரசின் அவசர சட்டம் குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி மருத்துவ மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் 31க்குள் முடிக்க வேண்டும். தற்போதைய நிலையில் இன்னும் 15 நாட்களில் கவுன்சிலிங்கை முடிப்பது சாத்தியமில்லை.
எனவே ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பிறகும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவ கவுன்சிலிடம் கூடுதல் அவகாசம் கேட்க தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான மனுவை இந்திய மருத்துவ கவுன்சிலிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைவில் சமர்ப்பிக்க உள்ளனர்.