
சென்னையில் பள்ளி வேன் மோதி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை வளசரவாக்கம் அருகே ஆழ்வார்திருநகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேசன் தனியார் பள்ளியில் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரது மகன் தீக்சித் 2 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று வழக்கம் போல், மாணவர் தீக்சித் பள்ளி வேனில் பள்ளிக்கு சென்றுள்ளார். வேனில் இருந்து மற்ற மாணவர்கள் இறங்கி சென்றபோது, வேனில் தீக்சித் தனது பையை வைத்துவிட்டு இறங்கி வகுப்பரைக்கு சென்றுள்ளார். பின்னர் பையை வேனில் வைத்துவிட்டு வந்ததை அறிந்த தீக்சித் அதனை எடுப்பதற்காக பள்ளி வேனை நோக்கி திரும்பி சென்றுள்ளார் அப்போது வேனை நிறுத்துவதற்காக வேன் ஓட்டுநர் பூங்காவனம் வேனை ரிவர்ஸ் எடுத்துள்ளார்.
இதனால், வேனில் ஏற முயற்சித்த மாணவர் தீக்சித் தவறி கீழே விழுந்து வேனில் சிக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவர் தீக்சித் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவர் தீக்சித் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து மாணவன் உயிரிழந்தது பற்றி மாவட்ட கல்வி அதிகாரி விபத்து நடந்த தனியார் பள்ளியில் விசாரணை நடத்தினார்.
மேலும் மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வி இயக்குனர் கருப்புசாமி உத்தரவிட்டுள்ளார். பள்ளியிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட கல்வி அலுவலர் சுரேந்தர்பாபுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறுவன் உயிரிழப்பையடுத்து, பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு அனைத்து குழந்தைகளின் பெற்றோர்களும் நேரில் சென்று தங்களின் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மேலும் இந்த சம்பவத்தில் பேருந்தில் இருந்து இறக்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தியையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே பள்ளி வேன் மோதியதில் மாணவன் இறந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி முதல்வர் தனலட்சுமி, தாளாளர் ஜெயசுபாஷ் மற்றும் வேனில் இருந்து இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.