
சிவகங்கை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிறுவனம் அலைபேசி கோபுரங்களுக்காக தனி நிறுவனம் தொடங்க திட்டமிட்டுள்ளது.
இதற்கு பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கத்தினர் ஆரம்பம் முதலே எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
மேலும், பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 3-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொலைதொடர்பு மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு என்.எப்.டி.இ. தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் மாரி தலைமைத் தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமரேசன் முன்னிலை வகித்தார்.
எப்.என்.டி.ஓ. தொழிற்சங்க கிளைச் செயலாளர் ஆறுமுகம், பி.எஸ்.என்.எல்.இ.யூ., தொழிற்சங்கத்தின் மாவட்ட உதவிச்செயலாளர் ரவி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.