
ரேஷன் கடை ஊழியர் இறந்ததாக, இருப்பு பலகையில் எழுதி வைத்து வதந்தி பரப்பிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காட்டாங்கொளத்தூரில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கீழ் இயங்கும் ரேஷன் கடை செயல்படுகிறது. இங்கு, காஞ்சிபுரத்தை சேர்ந்த தேவராஜ் (40) என்பவர் ஊழியராக வேலை பார்க்கிறார்.
நேற்று காலை அப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக ரேஷன் கடைக்கு சென்றனர். அப்போது, அங்குள்ள அறிவிப்பு பலகையில், ‘காட்டாங்கொளத்தூர் பகுதி மக்களுக்கு ஓர் துயர செய்தி. நமது பகுதி ரேஷன் கடை ஊழியர் தேவராஜ் இன்று காலை அகால மரணமடைந்து விட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய நமது பகுதி மக்கள் மாலையுடன் வந்து, அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்ள வேண்டும் என எழுதப்பட்டிருந்தது.
இதை பார்த்ததும், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தேவராஜ், அப்பகுதி மக்களிடம் நல்ல முறையில் பழகியவர். அனைவரிடமும் அன்புடன் பேசுவார். இதனால், அவர் இறந்ததாக எழுதப்பட்டு இருப்பதை அறிந்ததும், அப்பகுதியில் சோகமும், பரபரப்பும் நிலவியது. இதனால், ஏராளமானோர் ரேஷன் கடை முன்பு திரண்டனர்.
சிறிது நேரத்தில், தேவராஜ் அவசர அவசரமாக கடையை திறக்க அங்கு வந்தார். அதை பார்த்ததும், பரபரப்பு மேலும் அதிகரித்தது. அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டு இருந்ததை கண்ட தேவராஜ், ஆவேசமடைந்தார்.
“யார் இதை எழுதியது” என அங்கிருந்த மக்களிடம் விசாரித்தார். ஆனால், யாருக்கும் அதுபற்றி தெரியவில்லை.
இதனால், மனமுடைந்த தேவராஜ், மறைமலைநகர் போலீசில் புகார் செய்தா. இன்ஸ்பெக்டர் வெளியில் சென்றுள்ளார். பிறகு வாருங்கள், என போலீசார் அவரை திருப்பி அனுப்பி உள்ளனர். உடனே தேவராஜ், அருகில் உள்ள மற்ற ரேஷன் கடை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் செங்கல்பட்டு, காயரம்பேடு, மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் உள்ள 150 ரேஷன் கடைகளை ஊழியர்கள் மூடிவிட்டு, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமையில், காவல் நிலையம் முன்பு திரண்டனர். வதந்தி பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷமிட்டனர்.
இந்த போராட்டத்தால், ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தகவலறிந்து அங்கு வந்த இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், அவர்களிடம் சமரசம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதற்கிடையில், பாலாஜி என்பவரது செல்போனில் இருந்து, அதே பகுதியில் உள்ள பலருக்கு தேவராஜ் இறந்துவிட்டதாக எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டது.
அந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், ரேஷன் கடை பெயர் பலகையில் எழுதியது தெரிந்தது. இதையடுத்து போலீசார், அச்சிறுவனை கைது செய்தனர்.