ராமேஸ்வரம் பாம்பன் பாலத்திற்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேஸ்வரம் சுற்றுலாத்தளம் என்பதால், எப்போதுமே பாம்பன் பாலம் பரபரப்பாகவே காணப்படும். சுற்றுலாப் பயணிகள் அந்த பாலத்தில் வாகனத்தை நிறுத்தி கடலை ரசிப்பது வழக்கம். இந்நிலையில், பாம்பன் பாலத்திற்கு இன்று மர்ம நபர் ஒருவர் திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், பாம்பன் பாலத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என மிரட்டியுள்ளார்.
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து ராமநாதபுரம் மாவட்டம் போலீஸ் எஸ்பி ஓம்பிரகாஷ் மீனாவின் உத்தரவின் பேரில், டிஎஸ்பி மகேஷ் மற்றும் போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பாம்பன் பாலத்தில் சோதனை நடத்தினர்.
ரயில் பாலம் மற்றும் சாலை பாலம் ஆகிய இரண்டிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் பாம்பன் பாலம் பகுதியில் பரபரப்பு நிலவியது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, நாமக்கல்லை சேர்ந்த மனநலம் பாதித்த சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டலால் திருச்சி-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் தாமதமானது.