கொங்கு மண்டலத்துக்கு வேட்பாளர்களை தேர்வு செய்த பாஜக? அமைச்சர் சீட் கன்ஃபார்ம்!

By Manikanda PrabuFirst Published Feb 5, 2024, 1:02 PM IST
Highlights

கொங்கு மண்டலத்துக்கான வேட்பாளர்களை பாஜக மேலிடம் இறுதி செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தமிழ்நாட்டின் மேற்குபகுதிகளான கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர், கரூர், நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளையும் கொங்கு மண்டலம் என அழைப்பது சம கால அரசியலில் வழக்கமாக உள்ளது. இந்த கொங்கு மண்டலத்தில் உள்ள கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், நீலகிரி ஆகிய தொகுதிகளில் அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகம். பாஜகவுக்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது.

இந்த நிலையில், கொங்கு மண்டலத்துகுட்பட்ட கோயம்புத்தூர், திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக இறுதி செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பகுதிகளில் ஏற்கனவே தங்களுக்கு செல்வாக்கு உள்ளதால், தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே வேட்பாளர்களை தேர்வு செய்து இப்போதிருந்தே களப்பணியாற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

Latest Videos

எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதிமுக கூட்டணியில் இரு இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு பெற திட்டமிட்டிருந்த அகக்ட்சிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்துள்ளது. இருப்பினும், அக்கூட்டணி தேர்தலுக்கு பின்னர் சேர வாய்ப்புள்ளதாக்க கூறுகிறார்கள். இதனிடையே, பாமக, தேமுதிக, அமமுக, ஓபிஎஸ் மற்றும் சிறு கட்சிகளை கூட்டணியில் இணைத்து வெற்றி வியூகத்தை பாஜக வகுத்து வருகிறது.

கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் இருந்தாலும், கொங்கு மண்டலம் தங்களுக்கு செல்வாக்கான பகுதி என்பதால், அங்கு வாக்குகளை அறுவடை செய்ய இப்போதே பணிகளை துவங்கி விட்டது பாஜக, அதன் ஒருபகுதியாகத்தான் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தற்போது மத்திய இணையமைச்சராக இருக்கும் ராஜ்யசபா எம்.பி. எல்.முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி  விட்டது. அங்கு அவர் வெற்றி பெறும் பட்சத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் கண்டிப்பாக அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். பாஜக மேலிடத் தலைவர்களின் குட் புக்கிலும் எல்.முருகன் இடம்பெற்றுள்ளார்.

சம்பய் சோரன் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு: ஹேமந்த் சோரன் பங்கேற்பு!

அதேபோல், திமுக கூட்டணியில் கோவையில் கமல்ஹாசன் போட்டியிட்டால் அங்கு வானதி சீனிவாசனுக்கு வாய்ப்பளிக்கக் கூடும் என்கிறார்கள். கோவை தெற்கு தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனை வானதி தோற்கடித்தார் என்பதால், மீண்டும் அவருக்கே சான்ஸ் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். வானதி வெற்றி பெற்றாலும் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என தெரிகிறது. பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடுவதற்கு, மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் என்கிறார்கள்.

பாஜக வெற்றி பெறும் பட்சத்தில் எப்படியும் கொங்கு மண்டலத்திற்கு இரண்டு அமைச்சர்கள் கிடைப்பார்கள் என்பதால், அப்பகுதியினர் உற்சாகமாக தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர்.

click me!