
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் கோவில் கும்பாபிஷேக விழாவின்போது விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்களால் 200-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர். தெறித்து ஓடிய மக்களால் அந்தப் பகுதியே பெரும் பரபரப்பானது.
திண்டுக்கல் மாவட்டம், நல்லாம்பட்டியில் காளியம்மன், பகவதியம்மன் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு உள்ளது.
நேற்று நடைப்பெற்ற இந்தக் கோவிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி மாலை கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அடியார்கள் கரகம் அலங்கரித்து, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
இதனையடுத்து கிராமத்தின் அருகே உள்ள கிணற்றிற்கு ஊர்வலமாகச் சென்று முளைப்பாரியை கரைக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் அடியார்கள் பங்கேற்று முளைப்பாரியை கரைத்துக் கொண்டிருந்தனர். இதனை காண ஏராளமான மக்களும் அந்தப் பகுதியில் கூடியிருந்தனர்.
அப்போது, அந்த கிணற்றின் அருகே உள்ள ஒரு மரத்தில் இருந்த தேன்கூட்டை யாரோ கலைத்துவிட்டனராம். இதனால் கூட்டில் இருந்து கலைந்து வந்த தேனீக்கள் கிணற்றின் அருகே கூடியிருந்த மக்களை கொட்டத் தொடங்கின. தேனீக்களிடம் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் நாலாபுறமும் தெறித்து ஓடினர்.
கூட்ட நெரிசலும் அதிகமாக இருந்ததால் ஒருவரை ஒருவர் முந்தியடித்துக்கொண்டு ஓடியதால் சிலர் கீழே தவறி விழுந்தனர். எனினும், தேனீக்கள் விரட்டி, விரட்டி அனைவரையும் கொட்டின. இதில் பெண்கள், குழந்தைகள், சிறுவர் - சிறுமிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 10-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து 108 அவசர ஊர்திக்கு தகவல் கொடுக்கப்பட்டதால் அவர்கள் வந்து காயமடைந்தவர்களை ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
ஏராளமானோர் காயமடைந்ததால் அனைவரையும் அவசர ஊர்தியில் கொண்டுச் செல்ல முடியவில்லை. இதனால் ஆட்டோ, மினி வேன், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
காயமடைந்ததில் நல்லாம்பட்டியை சேர்ந்த கந்தசாமி (50), ஜெயபால் (42), கோவிந்தன் (40), ரங்கம்மாள் (35), ராமகிருஷ்ணன் (52), மாரிமுத்து (54) ஆகியோர் உடனே மயக்கமடைந்தனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இந்த சம்பவம் குறித்து காவலாளார்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் சிகாமணி தலைமையில் தாலுகா காவலாளர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர்.