தடியடி நடத்திய காவலாளர்கள்; கல்வீசியும், தீவைத்தும் எரித்த ஓட்டுநர்கள்…

First Published Dec 24, 2016, 8:41 AM IST
Highlights


கிருஷ்ணராயபுரம்,

மாயனூரில் மணல் வழங்க கோரி மறியல் நடத்தியவர்கள் மீது காவலாளர்கள் தடியடி நடத்தினர். அதற்கு லாரி ஓட்டுநர்கள் கல் வீசித் தாக்கியும், மூன்று அலுவலகங்களை தீ வைத்தும் எரித்தனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த திருக்காம்புலியூரில் மணல் குவாரி இயங்குகிறது. கோவை, திருப்பூர், பல்லடம், ஈரோடு, சேலம், கோபி மற்றும் பல்வேறு பகுதிகளில் இங்கிருந்து மணல் அள்ளிச் செல்ல லாரிகள் வருகின்றன.

இந்த லாரிகள் மாயனூர் பெட்ரோல் பங்க் அருகே உள்ள லாரிகள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்படும். அங்கு டோக்கன் வழங்கப்பட்ட பிறகு, ஓட்டுநர்கள் திருக்காம்புலியூர் மணல் குவாரிக்கு வந்து லாரிகளில் மணல் அள்ளிச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மாயனூரில் உள்ள லாரிகள் நிறுத்தும் இடத்தில் மணல் அள்ளிச் செல்வதற்காக காத்திருந்தன. ஆனால், கடந்த மூன்று நாள்களாக மணல் வழங்க டோக்கன் வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

இதனால் கோவம் அடைந்த லாரி ஓட்டுநர்கள் நேற்று முன்தினம் இரவு கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை காவலாளர்கள் தடியடி நடத்தி கலைத்தனர்.

அப்போது லாரி ஓட்டுநர்கள் கல்வீசி தாக்கியதில் ரோந்து காவலர் ஏட்டு இரத்தினகிரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர், அங்கு மணல் அள்ள டோக்கன் வழங்க ஓலையால் அமைக்கப்பட்டு இருந்த 3 அலுவலகங்களை தீவைத்து எரித்தனர்.

இதனைத் தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் கரூர் மாவட்ட காவல் சூப்பிரண்டு ராஜசேகரன் தலைமையில், அதிரடி படையினர் மற்றும் வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் அலுவலகங்களை தீ வைத்து எரித்துக் கலவரத்தை தூண்டியதாக ராசிபுரம் ராஜபிரபு (28), லால்குடி பெரியசாமி (38), பொள்ளாச்சி ரவிக்குமார் (37) ஆகிய மூன்று பேரை வியாழக்கிமை இரவு காவலாளர்கள் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று பொள்ளாச்சி சிவலிங்கம் (55), ஈரோட்டைச் சேர்ந்த ஆனந்த்பாபு (28), யுவராஜ் (27), சேகர் (30), கரூர் கோவிந்தராஜ் (48), ஊட்டி ராமர் (26), திருப்பூர் வசந்தகுமார் (36), ராமநாதபுரம் முத்துராமலிங்கம் (40), திண்டுக்கல் இளங்கோவன் (48) நீலகிரி கண்ணன் (26) உள்பட 17 பேரை மாயனூர் காவல் இன்ஸ்பெக்டர் நாகராஜன் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று மணல் லாரிகள் நிறுத்தும் இடத்தில் பாதுகாப்புக்காக காவலாளர்கள் குவிக்கப்பட்டனர்.

பின்னர் அனைத்து லாரிகளுக்கும் முறையாக டோக்கன் வழங்கப்பட்டு வரிசையாக திருக்காம்புலியூர் மணல் குவாரிக்கு அனுப்பப்பட்டு மணல் வழங்கப்பட்டது.

இதனால் எந்தவித பிரச்சனையுமின்றி நேற்றுதான் மணல் லாரிகள் இயங்கியது.

tags
click me!