
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்விச் செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர், கடந்த 2014-ல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில்,
தமிழகத்தில் 2,080 பள்ளிகளில் கழிப்பறை இருந்தும் பயன்படுத்த தகுதியற்றதாக உள்ளன. பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தவும், ஏற்கெனவே உள்ள கழிப்பறைகளை பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை கடந்த முறை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்,
மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் ஆணையர்களாக என்.கிருஷ்ணவேனி, திண்டுக்கல், என்.ஆனந்தகுமார் ஆகியோர் தலைமையில் வழக் கறிஞர்கள் குழு நியமனம் செய்யப்பட்டது. இக்குழுவினர் 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
அந்த அறிக்கையில், பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறை இல்லை. சில இடங்களில் கழிப்பறைகள் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. சில கழிப்பறைகளை ஆசியர்கள் தங்களின் பயன்பாட்டுக்காக பூட்டி வைத்துக்கொள்கின்றனர்.
கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கு துப்புரவு பணியாளர்கள் இல்லை. பள்ளிகளில் உள்ள நாப்கின் வழங்கும் இயந்திரம் செயல்பாட்டில் இல்லை. ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெண்டர் விடப் பட்டு மாணவிகளுக்கு இலவச நாப் கின் வழங்கப்படுகிறது. அந்த நாப் கின் சுகாதாரமாகவும், தரமானதாக வும் இல்லை. இதனால், மாணவ, மாணவிகளின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் குழுவின் அறிக்கையை தமிழக அரசுக்கு பதிவுத்துறை அனுப்பிவைக்க வேண்டும்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும், ஏற்கனவே உள்ள கழிப்பறைகளை பராமரிக்க துப்புரவு பணியாளர் நியமிக்கவும் எடுக்க வேண்டிய உறுதியான நடவடிக்கை குறித்து பள்ளிகல்விச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர், மேலும், இந்த வழக்கின் விசாரணையை நவ.8-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.