நாமக்கல்
தேர்தல் நடவடிக்கைகளால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகம் முடங்கியுள்ளதை தமிழக அரசு சரி செய்யாததால் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஒட்டுமொத்த விடுப்பில் செல்ல முடிவெடுத்துள்ளனர்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தமிழக முதலமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோரிக்கை ஒன்றை வைத்தனர்.
அதில், "கூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகளால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் பணியாளர்கள் இன்னல்களுக்கு ஆளாவதோடு, சங்க நிர்வாகம் முற்றிலும் முடங்கி உள்ளதாகவும், அதனை சரி செய்ய அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்றனர்.
இதற்கிடையே இந்த கோரிக்கைக்கு இதுவரை தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் வருகிற 21-ஆம் தேதி முதல் சங்க பணியாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்த விடுப்பில் செல்வது என்று சங்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், போராட்ட மாதிரி கடிதமும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி ஒட்டுமொத்த விடுப்பில் செல்வது தொடர்பாக தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் சங்க பணியாளர்கள், நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், "தேர்தல் நடவடிக்கைகளால் தொடக்க கூட்டுறவு சங்க நிர்வாகம் முடங்கி உள்ளது. இதனால் சங்க பணியாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். இதன் காரணமாக மக்கள் மத்தியில் சங்கத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இது குறித்து ஏற்கனவே அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதே நிலை நீடித்தால் சங்க பணியாளர்கள் அனைவரும் வருகிற 21-ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த விடுப்பில் செல்ல முடிவு செய்துள்ளோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.