திருச்சி,
வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கத் தேவையான பணத்தை ரிசர்வ் வங்கி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வங்கி அதிகாரிகள் திருச்சியில் போராட்டம் நடத்தினர்.
திருச்சியில் ஏராளமான ஏ.டி.எம்கள் இன்னும் செயல்படாமல் மூடிய நிலையிலேயே இருக்கிறது. வங்கிகளிலும் பணம் இல்லாததால் வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் வங்கி அதிகாரிகள் இருக்கின்றனர். வாடிக்கையாளரின் எதிர்ப்பையும் வங்கி அதிகாரிகள் சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர்.
இந்த நிலையில், திருச்சி மாவட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பேருந்து நிலையம் அருகே நேற்று போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு வங்கி அதிகாரிகள் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் இராமராஜ் தலைமை தாங்கினார்.
“வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கத் தேவையான பணத்தை ரிசர்வ் வங்கி கொடுக்க வேண்டும்”,
“அனைத்து ஏ.டி.எம்.களும் உடனடியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை வங்கி அதிகாரிகள் நடத்தினர்.
இதில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராகவும், கோரிக்கைகள் குறித்தும், முழக்கங்களை எழுப்பினர்.