தங்கையின் உடன் படிக்கும் மாணவியின் கர்பத்துக்கு காரணமான ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் வேலூரில் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த எருக்கம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். புருஷோத்தமனின் தங்கை
அருகில் உள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த வகுப்பு தோழியான மற்றொரு மாணவியுடன் பள்ளி சென்று வருவது வழக்கம். இவர்கள் இருவரையும், புருஷோத்தமன் தனது ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், தங்கையின் தோழிக்கும், புருஷோத்தமனுக்கும் இருவரும் நாளடைவில் காதல் ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இந்த நிலையில் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த விவரத்தை, மாணவி புருஷோத்தமனிடம் கூறியுள்ளார். அதற்கு புருஷோத்தமன் யாருக்கும் தெரியாமல் கருவை கலைத்துவிடலாம் என்று சொல்லியுள்ளார்.
புருஷோத்தமன் கூறியபடி கருக்கலைப்பு செய்ய முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால் மாணவியின் தாய், சந்தேகப்பட்டு அவரிடம் விசாரித்துள்ளனர். இதில் மாணவி நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். இதனைக் கேட்ட மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர், குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, ஆய்வாளர் அன்பரசி, ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தமனை அழைத்து விசாரித்தார். அப்போது, புருஷோத்தமன் அனைத்தையும் ஒப்புக் கொண்டுள்ளார். இதன் அடிப்படையில், புருஷோத்தமன் மீது பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.