
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம் பங்கேற்ற விவசாயிகள் தங்களது குறைகள் அனைத்தையும் ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் கணேஷ் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, உதவி கலெக்டர் கே.எம்.சரயு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டம் தொடங்கியபோது, விவசாயி மிசா.மாரிமுத்து தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார்.
அந்த கோரிக்கையை ஏற்று, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர், இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், "ஆவணத்தான் கோட்டை பகுதியில் உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, விவசாயிகள் மின் சாரம் இன்றி பயிர்களை காக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தேங்காயை தினமும் கொள்முதல் செய்ய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் தைலமரங்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. ஆகவே, புதிதாக தைல மரக்கன்றுகள் நட மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும்.
கடந்த ஆண்டுபோல் இல்லாமல் இந்த ஆண்டு அனைவருக்கும் பயிர் காப்பீடு தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
சிறுதானிய உணவு பயிரிடுவதற்கு விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். குறைந்த தண்ணீரை கொண்டு எவ்வாறு விவசாயத்தில் வெற்றி பெறுவது என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஓடக்குளம் பகுதியில் தடுப்பணை அமைக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் வரத்து வாரிகளை தூர்வார வேண்டும். மாவட்டத்தில் பாஸ்பேட் உரம் இருப்பு இல்லை. இந்த மாதத்திற்குள் விவசாயிகளுக்கு பாஸ்பேட் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலுப்பை மரங்கள் அதிக அளவில் இருந்தன. இதனால் மழைப்பொழிவும் அதிக அளவில் இருந்தது. தற்போது தைல மரங்கள்தான் அதிகம் உள்ளன. அதனை அகற்றி விட்டு மாவட்டம் முழுவதும் இலுப்பை மரக்கன்றுகளை நட வழிவகை செய்ய வேண்டும்.
தேர்தல் காரணமாக கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் மற்றும் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்குவதில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்கள் மற்றும் வரத்து வாரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால்நடைத்துறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளங்களில் கருவேல மரங்கள் மீண்டும் வளராமல் தடுக்கும் வகையில், பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் குளங்களை சுத்தப்படுத்த வேண்டும்.
அறந்தாங்கி தாலுகா கொடிவயல் கிழக்கு பகுதியில் உள்ள பள்ளியின் அருகே டாஸ்மாக் சாராயக் கடை திறக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்து பள்ளியின் அருகே திறக்க உள்ள டாஸ்மாக் சாராயக் கடையை வேறு இடத்தில் திறக்க உத்தரவிட வேண்டும்.
இதேபோல பெரியாளூரில் அரசு பள்ளியின் அருகே உள்ள டாஸ்மாக் சாராயக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமைத்து தமிழக விவசாயிகளுக்கு உரிய நீர் கிடைக்க உறுதிப்படுத்த வேண்டும். அறந்தாங்கி பகுதியில் மின்மாற்றிகள் பல பழுதடைந்து உள்ளன. இதனால், குறைவழுத்த மின்சாரமே வருகிறது.
இதனால் விவசாயத்திற்கு பயன்படுத்தும் மின் மோட்டார்கள் தொடர்ந்து பழுதடைந்து வருகின்றன. ஆகவே, பழுதடைந்த மின்மாற்றிகளை அகற்றி விட்டு புதிய மின்மாற்றிகள் அமைக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இலவச மின் இணைப்புகளை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேருந்து பயணச்சீட்டு வழங்கும் வரை அவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக சென்று வர அனுமதி வழங்க வேண்டும்" என்று ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
இவையனைத்தையும் கேட்ட ஆட்சியர் இதுகுறித்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.