காவிரி: ஏப்.6-ல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

First Published Apr 3, 2018, 11:50 AM IST
Highlights
April 6 lawyers court boycotts!


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தில் தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் அதிமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இந்தப் போராட்டம் தொடர்கிறது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும்  துணை முதலமைச்சர்  ஓ பன்னீர் செல்வமும் கலந்து கொண்டுள்ளனர். அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் எஸ்.கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, தி.நகர் சத்தியா, வி.என்.ரவி, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதேபோல், திருவள்ளூர், காஞ்சீபுரம், திருச்சி, தஞ்சாவூர், சேலம், கன்னியாகுமரி, திண்டுக்கல், ஈரோடு, தேனி, திருப்பூர், நாமக்கல், கோவை, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், நெல்லை, சிவகங்கை, மதுரை, தர்மபுரி, நாகப்பட்டினம், நீலகிரி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, வேலூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சையில் அமைச்சர் துரைக்கண்ணு, எம்.பி. வைத்தியலிங்கம் தலைமையிலும், திருப்பூரில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையிலும், நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி, கோவையில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலும், கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலும், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரி, காரைக்காலிலும் அ.தி.மு.க. அறிவித்த உண்ணாவிரத போராட்டம் அங்குள்ள நிர்வாகிகள் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், நாளை மறுநாள் திமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. வரும் 11 ஆம் தேதி அன்று வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 6 ஆ தேதி அன்று நீதிமன்ற புறக்கணிப்பும், போராட்டமும் நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

click me!