தேனி
தேனியில் மலைச் சாலையில் தோட்ட வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற ஜீப் மீது பின்னால் வந்த மற்றொரு ஜீப் வேகமாக மோதியதில் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.
தேனி மாவட்டம், போடி டொம்புச்சேரி, மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்கள், கேரளப் பகுதிக்குத் தோட்ட வேலைக்கு ஜீப்பில் சென்று வருகின்றனர்.
நேற்று முன்தினம், போடிமெட்டு மலைச் சாலையில் தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஜீப்புகள் வரிசையாக சென்றபோது மணப்பட்டி கிராமம் அருகே எதிரே கேரளத்திலிருந்து லாரி ஒன்று வந்துள்ளது.
அப்போது மேக மூட்டமாக இருந்ததால் லாரி அருகே வந்த பின்னரே கவனித்த ஜீப் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டு வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனால், பின்னால் வந்த மற்றொரு ஜீப், இந்த ஜீப்பின்மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில், முன்னால் சென்ற ஜீப்பில் அமர்ந்திருந்த டொம்புச்சேரியைச் சேர்ந்த தங்கமணி (35), சுந்தரம் (55), ராணி (47), மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி (60), சிவபாக்கியம் (49), ஜோதி (50), லட்சுமி (45) ஆகிய 7 பேரும் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து போடி குரங்கணி காவலாளர்கள் வழக்குப் பதிந்து ஜீப் ஓட்டுநர் டொம்புச்சேரியைச் சேர்ந்த சரவணன் (21) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் கேரளப் பகுதிக்குத் தோட்ட வேலைக்கு அழைத்துச் செல்லும் ஜீப்பால் நாள்தோறும் விபத்துகள் ஏற்பட்டுதான் கொண்டிருக்கின்றன என்று அப்பகுதி மக்கள் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளனர்.