தடுப்பூசி போட்டவர்களை தாக்கும் கொரோனா..? 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..

Published : Dec 09, 2021, 12:51 PM ISTUpdated : Dec 09, 2021, 01:01 PM IST
தடுப்பூசி போட்டவர்களை தாக்கும் கொரோனா..? 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..

சுருக்கம்

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் தங்கிபடிக்கும் 9 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.  

சென்னையில் கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், முதலில் ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவர்களது தொடர்பில் இருந்த 300 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளபட்டதில் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.கொரோனா பாதிப்பு  உறுதியான அனைவரும் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சையாக அனுமதிக்கபட்டுள்ளதாகவும், அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். மேலும் அண்ணாபல்கலைகழகத்தில் உள்ள 763 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும், முழுமையாக நீங்கவில்லை. நேற்றைய அறிக்கைப்படி,  தமிழகத்தில் 1 லட்சத்து1,523 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 703 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. 7 ஆயிரத்து 946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 728 பேர் நேற்று ஒரேநாளில் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 88,142 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனைகளில் 7 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலேயே, அதிகபட்சமாக சென்னையில் 122 பேருக்கும், கோவையில்-117, செங்கல்பட்டு- 56, ஈரோடு-58, திருப்பூர்-50 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன்படி மாணவர்கள் வகுப்புகளில் கலந்துகொண்டு பாடங்களை கற்று வருகின்றனர். கல்லூரிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறி, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா தொற்று உறுதியான மாணவர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 6-ந்தேதி அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் ஒருவருக்கு நோய் தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால், அவருடன் தொடர்பில் இருந்த விடுதியில் தங்கியிருந்த மற்ற மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடம் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில், மேலும் 8 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று பாதித்த 9 மாணவர்களும் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பின்னர், மாணவர்கள் தங்கியிருந்த பல்கலைகழக விடுதி அறைகள் முழுவதும் கிருமிநாசினி கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் சுத்தம் செய்யப்பட்டதாகவும் விடுதியில் தங்கி இருக்கும் மற்ற மாணவர்கள் அனைவரும், தொடர்ந்து நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளாமல், 14 நாட்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்பில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதுதவிர வெளியில் இருந்து வரும் மாணவர்கள், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வருவதுடன், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகுதான் நேரடி வகுப்புகளுக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் மாநகராட்சி, பல்கலைக்கழகத்துக்கு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருக்கும் 9 மாணவர்களுக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என்றும், அவர்கள் தற்போது நலமுடன் இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வந்துள்ளன.

PREV
click me!

Recommended Stories

நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்
விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!