Tasmac : காகித டப்பாவில் 90 மிலி மது விற்கத் திட்டம்.? இந்த அவப்பெயர் வேண்டாம் முதல்வரே.!எச்சரிக்கும் அன்புமணி

By Ajmal KhanFirst Published Jul 1, 2024, 12:26 PM IST
Highlights

கையடக்க காகிதக் குடுவைகளில் மதுவை அறிமுகம் செய்து பள்ளிக் குழந்தைகளையும், சிறுவர்களையும் கெடுத்தவர் என்ற பழியும், அவப்பெயரும் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என அன்புமணி தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் மது விற்பனை

டாஸ்மாக் கடைகளில் 90 மிலி மது விநியோகம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், காகிதக் குடுவைகளில் 90 மிலி மதுவை விற்பனை செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனம் முன்வைக்கும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. டாஸ்மாக் கடைகளில் குறைந்த அளவாக 180 மிலி மது மட்டுமே கிடைப்பதாகவும், அதன் குறைந்தபட்ச விலை ரூ.140 என்பதால், அவ்வளவு பணம் கொடுத்து டாஸ்மாக் மதுவை வாங்கிக் குடிக்க முடியாதவர்கள் தான்  குறைந்த விலையில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடிக்கிறார்கள் என்றும், குறைந்த விலையில் டாஸ்மாக் நிறுவனமே மதுவை விற்பனை செய்வதன் மூலம் கள்ளச் சாராயத்தை தடுக்கலாம் என்று டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது. இதை விட மிக மோசமான வாதம் இருக்க முடியாது.

தமிழக அரசின் நிலைப்பாடுகளில் இருந்து ஓர் உண்மை தெளிவாக புரிகிறது. எப்படியாவது 90 மிலி காகிதக் குடுவை மதுவை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி, மதுவை ஆறாக ஓட விட வேண்டும் என்பது தான் அரசின் நோக்கமாகும். அதற்காக கடந்த ஆண்டு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணமாகக் காட்டிய தமிழக அரசு, இப்போது  கள்ளச்சாராய விற்பனையை காரணமாக காட்டுகிறது. தமிழக அரசின் இந்த நோக்கம் தீமையானது. காகிதக் குடுவைகளில் 90 மிலி மது அறிமுகம் செய்யப்பட்டால் அது தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டின் இளைய சமுதாயத்தையும் சீரழித்து விடும்.

Annamalai : வெளிநாட்டில் படிக்க செல்லும் அண்ணாமலை.! தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார்.? வெளியான தகவல்

90 மிலி மது அறிமுகம்

காகிதக் குடுவைகளில் விற்கப்படும் மது, மில்க்ஷேக், பழச்சாறுகள் போன்றவற்றைப் போலவே தோற்றமளிக்கக்கூடியது என்பதால் சிறுவர்களோ, மாணவர்களோ காகிதக் குடுவைகளில் மது அருந்தினால் கூட அதை மற்றவர்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது.  அதனால்,  90 மிலி மது அறிமுகம் செய்யப் படுவது மிகப்பெரிய சமூக சீரழிவை ஏற்படுத்தி விடும். இம்முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும். இப்போது காகிதக் குடுவைகளில் மது அறிமுகம் செய்யப்பட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டால்,  அதை மாணவர்களும், சிறுவர்களும் மிகவும் எளிதாக வாங்கி, வீட்டில் இருந்து எடுத்துச் செல்லும் நொறுக்குத் தீனிகளைப் போல புத்தகப் பைகளில் வைத்து எடுத்துச் செல்லும் நிலை உருவாகி விடும்.

மது தீண்டத் தகாத பொருள் என்ற தயக்கம் உடைக்கப்பட்டு, அதுவும் ஒரு குளிர்பானம் என்ற எண்ணம் உருவாகி விடும். அனைவரும் தங்களில் சட்டைப் பைகள் மற்றும் பேண்ட் பைகளில் காகித மதுக் குடுவைகளை வைத்து வைத்து எடுத்துச் செல்வதும், பேருந்து, தொடர்வண்டி, திரையரங்கம்  உள்ளிட்ட பொது இடங்களில் வைத்து குடிப்பதும் சர்வ சாதாரணமாகி விடும். இது அடுத்த தலைமுறைக்கு அரசு செய்யும் பெருந்துரோகம் ஆகும். இனி வரும் தலைமுறைகள் சீரழிவதற்கு இதுவே காரணமாகி விடும்.

அவப்பெயர் வேண்டாம் முதல்வரே

ஆனால், மதுவின் விலை அதிகமாக இருந்தால் கள்ளச்சாராயத்தை தேடி மக்கள் செல்வார்கள் என்று கூறி குறைந்த விலையில் காகிதக் குடுவைகளில் மதுவை அறிமுகம் செய்வதை அனுமதிக்க முடியாது.  இப்போது கையடக்க காகிதக் குடுவைகளில் மதுவை அறிமுகம் செய்து பள்ளிக் குழந்தைகளையும், சிறுவர்களையும் கெடுத்தவர் என்ற பழியும், அவப்பெயரும் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்டு விடக்கூடாது.

எனவே, இத்திட்டத்தை கைவிட வேண்டும். கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருந்தால் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை அழைத்து அரசு ஆலோசனை நடத்த வேண்டும். இது தொடர்பாக ஆயிரமாயிரம் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை வழங்க பா.ம.க. தயாராக இருக்கிறது. அதை விடுத்து மலிவு விலை காகிதக் குடுவை மது போன்ற போகக்கூடாத ஊருக்கு தமிழக அரசு வழிகாட்டக் கூடாது என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

Fishermen : காலையிலேயே ஷாக் தகவல்..!! தமிழக மீனவர்கள் 25 பேர் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்

click me!