உயிரிழந்ததாக கருதப்பட்ட மூதாட்டி மீண்டும் உயிருடன் வந்தார்; ஊர் மக்கள் அதிர்ச்சி!!

By Thanalakshmi VFirst Published Sep 22, 2022, 2:38 PM IST
Highlights

உயிரிழந்ததாக கருதி அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் திரும்பி வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகனம் செய்யப்பட்ட உடல், யாருடையது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகர், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரா. வயது 72. இவருடைய கணவர் சுப்பிரமணி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுப்பிரமணி உயிரிழந்து விட்டார். சந்திரா பஜனை கோவில் தெருவில் உள்ள, தனது மகன் வடிவேலு பராமரிப்பில் வசித்து வருகிறார். வயதான சந்திரா அடிக்கடி கோவிலுக்கு செல்வது வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளார். குறிப்பாக சந்திரா சிங்கப்பெருமாள் அருகே உள்ள கோவிலுக்கு அடிக்கடி செல்வாராம்.  

வழக்கம்போல நேற்று சந்திரா சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில்  காலை 8.30 மணிக்கு செங்கல்பட்டு தாம்பரம் இடையிலான ரயில் தண்டவாளத்தில், கூடுவாஞ்சேரி அருகே வயதான மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரெழுந்துள்ளார்.

இதுகுறித்து நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் மூலமாக தெரியவந்துள்ளது. ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது சந்திரா என்று உறவினர்களும், ஊர் மக்களும் கருதி வந்துள்ளனர். உயிரிழந்த மூதாட்டியின் உடலை செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், உருவம் ஒத்துபோனதால் உயிரிழந்தது தனது அம்மா தான் என வடிவேல் உறுதி செய்ததை தொடர்ந்து, உறவினர்களிடம் சந்திராவின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

இதனை அடுத்து சந்திரா உயிரிழந்தது குறித்து, அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சந்திராவின்  உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஊரெங்கும் சந்திராவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்ட போட்டு மாலை இறுதி மரியாதை உடன் தாரை தப்பட்டை அடிக்கப்பட்டு,  நல்லடக்கம் செய்தனர். மேலும் சந்திராவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு, பால் ஊற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கப்படி சந்திராவிற்கு இன்று காலை படையல் போட்ட பொழுது, உயிரிழந்ததாக நல்லடக்கம் செய்யப்பட்ட சந்திரா உயிருடன் வீட்டிற்கு வந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து உறவினர்கள் மற்றும் சந்திராவிடம் தாம்பரம் ரயில்வே போலீசார் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

உயிரிழந்ததாக கருதி அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் திரும்பி வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகனம் செய்யப்பட்ட உடல், யாருடையது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!