ஐஸ்வர்யாவை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.ராமகிருஷ்ணன்…

First Published Mar 21, 2017, 8:48 AM IST
Highlights
Aishwarya to take stern action against the killers jiramakirusnan


பெரம்பலூர்

ஐஸ்வர்யாவை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

பெரம்பலூர் துறைமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்த கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை குரும்பலூரில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் ஐஸ்வர்யாவின் பெற்றோர் சந்தித்தனர்.

அப்போது அவர்களுக்கு ஆறுதல் கூறிய ஜி.ராமகிருஷ்ணன் நடந்த சம்பவம் குறித்து கேட்டு அறிந்தார்.

அதன் பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:

“குரும்பலூரில் கிணற்றில் இறந்து கிடந்த ஐஸ்வர்யாவும், அவரது காதலன் பார்த்திபனும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

காதலன் பார்த்திபன் மற்றும் அவரது நண்பர் மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் ஆகிய இருவரும், ஐஸ்வர்யாவின் சாவிற்கு காரணமாக இருந்துள்ளனர் என்றும், அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் காவலாளர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இந்த வழக்கில் நேரடியாக இதுவரை எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளவில்லை. இவ்வழக்கில் தங்களிடம் காவலாளர்கள் இதுவரை எந்தவொரு விசாரணையும் நடத்தவில்லை என்று ஐஸ்வர்யாவின் பெற்றோர் என்னிடம் தெரிவித்தனர்.

ஐஸ்வர்யா மரணத்தில், காவலாளர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு உண்மை நிலையை கண்டறிந்து காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இந்தப் பேட்டியின்போது, மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை, மாவட்ட செயலாளர் மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்லதுரை, ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

 

click me!