கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக கடந்த 3 நாட்களாக சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்ட தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு பேரவையில் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி - சட்டசபையில் அதிமுக அமளி
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தமிழக அரசுக்கு எதிராக அதிமுக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக அமளியில் ஈடுபட்ட அதிமுக கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. இந்தநிலையில் இன்று மீண்டும் சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேச அனுமதிக்க வலியுறுத்தி அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கைக்கு முன்பு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
3வது முறையாக வெளியேற்றம்
இதனை தொடர்ந்து சபாநாயகர், அதிமுக உறுப்பினர்களை அவை காவலர்கள் கொண்டு வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தார். மேலும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தற்காலிக நீக்கம் செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் நடத்தக் கூடாதது நடந்துள்ளது. அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி பேரவையில் தைரியமாக பேசியிருக்க வேண்டும், அதிமுக மலிவான விளம்பரம் தேடுவதாக துரைமுருகன் தெரிவித்தார். தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து அதிமுகவினர் கேள்விகளுக்கு பதில் அளிக்க அரசு தயாராக உள்ளதாகவும்,
கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவிற்கு தடை
பேரவையில் பேச மனமில்லாமல் வெளியில் சென்று பேசுவது அவை மாண்பிற்கு ஏற்புடையது அல்ல எனவும் கூறினார். மேலும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஜனநாயக கடமையாற்றாமல் வீண் விளம்பரம் தேட அதிமுக முனைப்புடன் உள்ளதாக கூறிய அவர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுக அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இதுதான் அதிமுக மற்றும் திமுகவிற்கு உள்ள வேறுபாடு எனவும் சுட்டிக்காட்டினார். அதிமுக ஏற்கனனவே இரண்டு முறை கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், இன்று மீண்டும் வெளியேற்றப்பட்டதால் மானிய கோரிக்கை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.