அதிமுக தலைமை அலுவலகம் யாருக்கு...? நீதிமன்றத்தில் இன்று உத்தரவு.. காத்திருக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்..!

By Ajmal KhanFirst Published Jul 20, 2022, 8:11 AM IST
Highlights

ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பு மோதல் காரணமாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இன்று உத்தரவு வெளியிடப்படவுள்ளது.
 

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்

ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் மிகப்பெரிய புயலை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக இரட்டை தலைமையாக இருந்த ஓபிஎஸ்-இபிஎஸ் தனித்தனியாக பிரிந்து மோதி வருகிறார்கள். கடந்த 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி அணியினர் சென்ற நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தை தனது ஆதரவாளர்களோடு ஓ.பன்னீர் செல்வம் கைப்பற்றினார். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 45க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள சாலையான அவ்வை சண்முகம் சாலை போர்க்களமானது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் சென்ற ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களோடு ஆலோசனை மேற்கொண்டார்.

எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம் செல்லாது..! இபிஎஸ்க்கு செக் வைத்த ஓபிஎஸ் அணி

நீதிமன்றத்தில் ஓபிஎ-இபிஎஸ் வழக்கு

இந்த தகவலை கேள்விப்பட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு கோபம் அடைந்தது. இதனையடுத்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களாக உள்ள வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்டவர்களை அதிமுகவில் இருந்து நீக்கினர். அதிமுக தலைமை யாருக்கு என்ற போட்டி காரணமாக இரு தரப்பினரும் மோதிக்கொண்டதால் அதிமுக அலுவகத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த இரு வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர். எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், கட்சி அலுவலகம் ஓபிஎஸ்க்கு  சொந்தமானதாக இருந்தால் அவர் ஏன் அலுவலக கதவை உடைத்து கோப்புகளை எடுத்து செல்ல வேண்டும்? என கேள்வி எழுப்பினார். ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், பெரும்பான்மையான பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் மட்டுமே தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருப்பதாக கருத முடியாது என குறிப்பிட்டார்.

மின்கட்டண உயர்வுக்கு மத்திய அரசு மீது பழி போடுவதா.? உங்களை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.. தமிழக பாஜக ஆவேசம்!

அதிமுக தலைமை அலுவலகம் யாருக்கு..?

ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு தரப்பினர் இடையே எந்த சமாதானமும் ஏற்படவில்லை. அப்படி இருக்கும்போது சீல் வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தால் மீண்டும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பாக அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்துள்ள நிலையில் இன்று பிற்பகல் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பிக்கிறார். இன்று நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் அதிமுக தலைமை அலுவலகம் யாருக்கு என தெரியவரும். எனவே இரண்டு தரப்பும் நீதிமன்ற உத்தரவுக்காக காத்துள்ளனர். அதே நேரத்தில் ஒருவருக்கு சாதகமாக வந்தால் மற்றவர் மீண்டும் நீதிமன்றத்தை  நிலை உள்ளது.

இதையும் படியுங்கள்

ஓஹோ.. சொல்லாததையும் செய்வோம் என்று கூறுவதன் அர்த்தம் இது தானா? ஸ்டாலின் பங்கமாய் கலாய்க்கும் தமாகா..!

 

click me!