குறுவை சாகுபடி.. டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன..? அதிகாரிகளுக்கு உத்தரவு ..

By Thanalakshmi VFirst Published May 23, 2022, 1:14 PM IST
Highlights

குறுவை சாகுபடிக்கான ஆயத்தநிலை தொடர்பாக துறை அலுவலர்களுடலான சிறப்பு ஆய்வு கூட்டம்‌ வேளாண்மை - உழவர்‌ நலத்துறை அமைச்சர்‌ எம்‌.ஆர்‌.கே. பன்னீர்செல்வம்‌ தலைமையில்‌ காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. 
 

இந்த ஆலோசகூட்டத்தில் பேசிய அமைச்சர்,  வருமுன்‌ காப்போம்‌ என்ற அடிப்படையில்‌ ஜீன்‌ 12 ற்கு முன்கூட்டியே மேட்டூர்‌ அணையிலிருந்து தண்ணீர்‌ பாசனத்திற்காக திறக்கப்படுவதால்‌ டெல்டா மாவட்டங்களில்‌ நெல்‌ நடவுப்பணி மேற்கொள்ள ஏதுவாக நல்‌ முளைப்புத்‌ திறன்‌ உள்ள நெல்‌ விதைகளை இருப்பு வைக்க வேண்டும்‌ என்றும்‌, விதை ஆய்வு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்‌ என்றும்‌ தெரிவித்தார்‌. 

வேளாண்‌ பொறியியல்‌ துறை மூலம்‌ தூர்வாரப்படும்‌ வாய்க்கால்‌ பணிகளை துரிதப்படுத்தி கடைமடை வரை தண்ணீர்‌ சென்று சேர்வதை உறுதிபடுத்திட வேண்டும்‌. குறுவை சாகுபடிக்கு தேவையான வேளாண்‌ இயந்திரங்களான டிராக்டர்‌, பவர்‌ டில்லர்‌, நிலச்சமன்படுத்தும்‌ கருவி மற்றும்‌ நடவு இயந்திரங்களை விவசாயிகள்‌ பயன்பாட்டிற்கு தயார்‌ நிலையில்‌ வைத்திருந்து தட்டுப்பாடின்றி வாடகைக்கு அளிப்பதுடன்‌ பிற மாவட்டங்களிலிருந்தும்‌ வரைவழைத்து வழங்கிட வேண்டும்‌ என்றும்‌, வட்டார அலுவலர்கள்‌ விவசாயிகளை சந்தித்து மண்ணாய்வு அடிப்படையில்‌ உரமிடுதலை ஊக்குவிக்க வேண்டும்‌ என்றும்‌ தெரிவித்தார்‌. 

மேலும் படிக்க: ஊடக சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்கிறதா திமுக அரசு..? கோதாவில் குதிக்கும் பத்திரிக்கையாளர் சங்கங்கள்

மேலும்‌, உழவர்‌ சந்தைகளை சுற்றி உள்ள கிராமங்களில்‌ காய்கறி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்க வேண்டும்‌ என்றும்‌ விவசாயிகள்‌ மதிக்கப்படுகிறார்கள்‌ என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்‌ என்றும்‌ அறிவுறுத்தினார்‌. முதல்வரின்‌ அறிவிப்பினை பயன்படுத்தி அனைத்து அலுவலர்களும்‌ இணைந்து குறுவைப்‌ பருவத்திற்கான விதைகள்‌, உரங்கள்‌ மற்றும்‌ கால்வாய்‌ தூர்வாருதல்‌ போன்ற பணிகள்‌ செவ்வனே செய்து உணவு தானிய உற்பத்திக்கு பாடுபட வேண்டும்‌ என்று பேசினார். 

இக்கூட்டத்தில்‌ பேசிய வேளாண்மை உற்பத்தி ஆணையர்‌ மற்றும்‌ அரசு செயலர்,”நடப்பு குறுவை பருவத்திற்கு தேவையான குறுகிய கால நெல்‌ சன்ன இரகங்களான கோ 51, எடிடீ 45, எடிடீ 43, போன்றவற்றின்‌ விதைகளை தேவையான அளவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும்‌ தனியார்‌ கடைகளிலும்‌ இருப்பு வைத்திருக்க வேண்டும்‌.  வேளாண்மைத்‌ துறை மூலம்‌ டெல்டா மாவட்டங்களில்‌ 1,609 மெ.டன்‌ விநியோகம்‌ செய்திட இலக்கு நிர்ணயம்‌ செய்யப்பட்டு இதுவரை 539 மெ. டன்‌ விற்பனை செய்து 1,111 மெ.டன்‌ இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

தனியார்‌ கடைகள்‌ மூலம்‌ 1,955 மெ.டன்‌ விநியோகம்‌ செய்யப்பட்டு 2,564 மெ.டன்‌ விதைகள்‌ இருப்பு
வைக்கப்பட்டுள்ளது. மேலும்‌, அவற்றின்‌ முளைப்புத்திறனை விதைச்சான்றளிப்பு துறை மூலம்‌ தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்‌. குறுவை பருவத்திற்கு தேவையான யூரியா, டிஏபி போன்ற உரங்கள்‌ தனியார்‌ மற்றும்‌ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும்‌ போதிய அளவு இருப்பு வைத்து அவற்றின்‌ விற்பனையையும்‌ தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்‌.

குறுவை பருவத்தில்‌ நடைமுறைப்படுத்தப்படவுள்ள 66,000 ஏக்கர்‌ மாற்றுப்பயிர்‌ சாகுபடியை ஊக்குவித்திடவும்‌ உரிய விவசாயிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான விதைகள்‌ மற்றும்‌ இதர வேளாண்‌ இடுபொருட்களை விநியோகம்‌ செய்திட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்‌. நீர்வளத்துறை மற்றும்‌ மாவட்ட நிர்வாகத்துடன்‌ ஒருங்கிணைந்து கால்வாய்‌ தூர்வாரும்‌ பணிகளை நல்ல முறையில்‌ செய்திட உரிய ஊக்கமும்‌ ஆக்கமும்‌ அளிப்பதோடு அனைத்து துறைகளையும்‌ ஒருங்கிணைத்து இதுவரை இல்லாத அளவு கூடுதல்‌ குறுவை சாகுபடி பரப்பு எய்திட அனைத்து நடவடிக்கைகளையும்‌ மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: கூட்டுறவுச்‌ சங்கங்கள் மூலம் அதிக அளவு பயிர்க்கடன்.. விவசாயிகளுக்கு முதலமைச்சர் அறிவித்த சூப்பர் திட்டம்..

click me!