நல்லவன் வாழணும், கெட்டவன் வீழ்வதுதான் நீதி. என்னுடைய சிறை வாழ்க்கையும் அதுபோலத்தான் என்று திருக்குறைளை மேற்கொள்க்காட்டி உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேரறிவாளன் கருத்து தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன்,” தமிழகத்தை சேர்ந்த ஒட்டுமொத்த மக்களும் என் விடுதலைக்கு ஆதரவு கொடுத்தனர். மேலும் 31 ஆண்டு காலம் என் அம்மாவின் தியாகம், போராட்டம், ஆரம்பக் காலங்களில் அவர் வெளியில் சந்தித்த அவமானங்கள், புறக்கணிப்புகள், வேதனைகள் அனைத்தையும் கடந்து இடைவிடாது போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு எனது தாயாருக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.
இவ்வளவு போராட்டம் நடத்த எங்களுக்கு கிடைத்த வலிமை, எங்கள் பக்கம் இருந்த உண்மை, நியாயம் மட்டும் தான். மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் நாவலை படித்திருக்கிறேன். எனது 18 வயதில் படித்தேன். சிறைக்கு வந்த பிறகும் படித்தேன். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் படித்தேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உணர்வை அது தந்தது. பிறகு, தாய் நாவலுடன் எனது தாயை ஒப்பிட்டேன். இதுவரை அவரிடம் நான் இதனைக் கூறியதில்லை. எனது தாயாரின் இந்த சட்டப்போராட்டத்துக்குப் பின்னால், என் ஒட்டுமொத்த குடும்பத்தின் ஆதரவும் உள்ளது.
மேலும் படிக்க: ஒரு தாயின் அறப்போர் வென்றது.! இனி ஒன்றியஅரசு என்னசெய்யப் போகிறது ? - திருமா ட்வீட் !
சகோதரிகள், சகோதரியின் கணவர்கள் எல்லாருடைய பலம்தான் இன்று இந்த வெற்றி. எனது வழக்கில் ஒரு திருப்பு முனையாக இருந்தது வழக்கை விசாரித்த அதிகாரி தியாகராஜன் ஐபிஎஸ், எனது வாக்குமூலத்தை அப்படியே எழுதவில்லை என்றும், அதனை மொழிபெயர்த்ததில் குளறுபடி ஏற்பட்டதையும் வெளிப்படையாக பேட்டி கொடுத்து, அதனை வாக்குமூலமாக உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்ததும் அமைந்திருந்தது.
மேலும் தமிழக அரசு தன் முழு ஆதரவை கொடுத்த உச்ச்நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடியது. இந்த 31 ஆண்டு சட்டப்போராட்டத்தின் போது ஒவ்வொரு முறை வீழும் போதும் எனது தாயாரை பார்க்க நான் அஞ்சுவேன். எனது விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த செங்கொடியின் தியாகம் தான் மக்கள் மத்தியில் எனக்கான ஆதரவை அதிகரித்தது. எனக்கு சிறைத்துறை முதல் காவல்துறை என பலரும் என்னிடம் அன்பு பாராட்டினர்.
நன்றி சொல்ல வேண்டியவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அனைவரையும் நேரில் சந்தித்து எனது நன்றியை தெரிவித்துக் கொள்வேன். தமிழக முதல்வரை நேரில் சந்தித்து எனது நன்றியை தெரிவிப்பேன் என்று கூறினார். முன்னதாக
”அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்” என்னும் திருக்குறளை மேற்கொள்க்காட்டி பேசினார். கெட்டவர்கள் நன்றாக வாழ்வதும், நல்லவர்கள் வீழ்ந்து போவது, துன்பத்தில் ஆழ்த்தப்படுவதை உலகம் நினைத்துப் பார்க்கும் என்பது பொருள். அது இயற்கையின் நீதியா. இல்லை. நல்லவன் வாழணும், கெட்டவன் வீழ்வதுதான் நீதி. என்னுடைய சிறை வாழ்க்கையும் அதுபோலத்தான் என்று கூறினார்.
மேலும் படிக்க: Perarivalan released :சொன்னோம்.. செய்தோம்.. பேரறிவாளன் விடுதலை குறித்து பெருமிதம் கொள்ளும் ஸ்டாலின்..