பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 14 வாக்குச்சாவடி மையங்கள் சேர்ப்பு; அரசியல் கட்சிகளும் அங்கீகரிப்பு...

First Published Jul 11, 2018, 11:43 AM IST
Highlights
added 14 election booths in peramblur


பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் புதிதாக 14 வாக்குச்சாவடி மையங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களை பகுப்பாய்வு செய்து வெளியிட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மீதுள்ள ஆட்சேபனை குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் இறுதி செய்ய வேண்டுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. 

அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பகுப்பாய்வு செய்து வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.

வெளியிடப்பட்ட அப்பட்டியல் மீதுள்ள ஆட்சேபனைகள அல்லது கூற்றுகள் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் இறுதி செய்யும் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைப்பெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) அழகிரிசாமி தலைமை வகித்தார். 

இந்தக் கூட்டத்தில், "கடந்த 2-ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி மற்றும் குன்னம் தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களின் மீது எந்தவித ஆட்சேபணையும் பெறப்படவில்லை. அதனை அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தினரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், "பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் புதிதாக 10 வாக்குச் சாவடி மையங்களும், குன்னம் தொகுதியில் 4 வாக்குச்சாவடி மையங்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி,தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தமாக 652 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. 

பெரம்பலூரில் வாக்குச்சாவடி கட்டிடம் பழுதடைந்தபடி 15 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இது தொடர்பாக 4 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையத்தின் ஒரு பகுதி மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இணைக்கப்பட்டது தொடர்பாக 8 வாக்குச்சாவடி மையங்களும் புதிதாக உருவாக்கப்பட்டன. 

அவ்வாறு பகுப்பாய்வு செய்யப்பட்ட வாக்குச்சாவடி மையங்களும் அங்கீகரிக்கப்பட்டது. இதனையும் அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தினரும் ஏற்றுக்கொண்டனர்" என்று பேசினார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் மற்றும் வட்டாட்சியர்கள் பங்கேற்றனர்.  

click me!