
பள்ளி வேன் மோதி 2 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவத்தில், காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். சென்னை வளசரவாக்கம் அருகே ஆழ்வார்திருநகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேசன் தனியார் பள்ளியில் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரது மகன் தீக்சித் 2 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று வழக்கம் போல், மாணவர் தீக்சித் பள்ளி வேனில் பள்ளிக்கு சென்றுள்ளார். வேனில் இருந்து மற்ற மாணவர்கள் இறங்கி சென்றபோது, வேனில் தீக்சித் தனது பையை வைத்துவிட்டு இறங்கி வகுப்பரைக்கு சென்றுள்ளார். பின்னர் பையை வேனில் வைத்துவிட்டு வந்ததை அறிந்த தீக்சித் அதனை எடுப்பதற்காக பள்ளி வேனை நோக்கி திரும்பி சென்றுள்ளார் அப்போது வேனை நிறுத்துவதற்காக வேன் ஓட்டுநர் பூங்காவனம் வேனை ரிவர்ஸ் எடுத்துள்ளார். இதனால், வேனில் ஏற முயற்சித்த மாணவர் தீக்சித் தவறி கீழே விழுந்து வேனில் சிக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த மாணவர் தீக்சித் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவர் தீக்சித் உயிரிழந்தார். இந்த நிலையில் பள்ளி வேன் மோதி 2 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவத்தில், காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளசரவாக்கத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பயின்ற இரண்டாம் வகுப்பு மாணவன் தீக்சிக், பள்ளி வேன் மோதி உயிரிழந்த சம்பவம் அறிந்து அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டதையடுத்து தற்போது பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற சூழலில் மாணவன் தீக்சித் உயிரிழந்திருப்பது மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. படுகாயமடைந்த மாணவனை பள்ளி நிர்வாகம் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் அனுமதித்திருந்தால், மாணவனை காப்பாற்றி இருக்கலாம். மாணவனின் உயிரிழப்புக்கு பள்ளி நிர்வாகத்தினர் அஜாக்கிரதையே காரணம். பள்ளிக் குழந்தைகளின் நலனை பாதுகாக்க இனியாவது தனியார் பள்ளிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும். மேலும் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தாருக்கு பள்ளி நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவன் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இனி வரும் காலங்களில் இதுபோன்ற அஜாக்கிரதை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.