வங்க கடலில் உருவாகவுள்ள புயல் வருகிற 4 ஆம் தேதி சென்ன மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் புயல்
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழையானது பெய்து வருகிறது. இந்தநிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரம் அடைந்துள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 03-12-2023 வாக்கில் புயலாக வலுப்பெற கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 அதிகாலை வடதமிழகம்- தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.
புயல் எப்போது கரையை கடக்கும்
இந்த புயல் காரணமாக தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடலில் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் புயலை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வங்க கடலில் வருகிற 3 ஆம் தேதி உருவாகியுள்ள புயலுக்கு மிர்ஜம் என பெயரிடப்படவுள்ளது.
இதனிடையே இந்த புயல் டிசம்பர் 4ஆம் தேதி மாலை நேரத்தில் மசூலிப்பட்டணம் - சென்னை இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் காற்றோடு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்