ஏசியில் கேஸ் கசிவு... தூக்கத்திலேயே 3 பேர் உயிரிழந்த பரிதாபம்!

By vinoth kumarFirst Published Oct 2, 2018, 1:26 PM IST
Highlights

சென்னை, கோயம்பேட்டில் ஏசியில் ஏற்பட்ட கேஸ் கசிவு காரணமாக தூங்கிக் கொண்டிருந்த தந்தை, தாய், மகன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை, கோயம்பேட்டில் ஏசியில் ஏற்பட்ட கேஸ் கசிவு காரணமாக தூங்கிக் கொண்டிருந்த தந்தை, தாய், மகன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோயம்பேடு மேட்டுக்குளத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கலையரசி வீட்டில் இருந்து வந்தார். இவர்களது 8 வயது மகன் கார்த்திகேயன் மேட்டுக்குளத்தில் உள்ள ஒரு பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

 

இன்று காலை, இவர்கள் வீடு வெகு நேரமாக திறக்கப்படவில்லை. அக்கம் பக்கத்தினர் சரவணன் வீட்டுக் கதவை தட்டினர். ஆனாலும், கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், கோயம்பேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சரவணனின் வீட்டுக் கதவை உடைத்தனர். அப்போது, பெட்ரூமில், சரவணன், அவரது மனைவி, மகன் ஆகியோர் பேச்சுமூச்சின்றி கிடந்தனர். 

மூன்று பேரையும் மீட்ட போலீசார், அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணன் உள்ளிட்டோரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, இரவு நேரத்தில், ஏசியில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டு, மூச்சுத்திணறல் காரணமாக மூன்று பேரும் உயிரிழிந்திருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.

 

பிரேத பரிசோதனைக்குப் பிறகே அவர்களது இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்றும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். தந்தை, தாய், மகன் ஆகிய மூன்று பேரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!