8-வது நாளை எட்டியது ஊரக வளர்ச்சித் துறையினரின் வேலை நிறுத்தம்; ஆர்ப்பாட்டம் நடத்தி அதகளம்...

First Published Jul 11, 2018, 7:52 AM IST
Highlights
8th day of strike by Rural Development Department held in demonstration


நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 8-வது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இந்தப் போராட்டம் 8-வது நாளாக தொடர்கிறது.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் இந்தப் போராட்டம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

அதன்படி கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடத்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணைச் செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின்மூலம், "ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். 

உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும். 

இரவு நேரங்களில் ஆய்வுக் கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த வேண்டும். 

பல மாவட்டங்களில் ஊழியர்களை எந்தவித விளக்கமும் கேட்காமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். 

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 

கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.60-ஐ ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும்.

ஊராட்சி ஒன்றியங்களின் புதிய கணினி உதவியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும். 

முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். 

சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 

ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு அளவீடு மதிப்பு ரூ.5 இலட்சமாக உயர்த்த வேண்டும். 

வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

ஊராட்சி செயலாளராக பணியாற்றி 2003-ஆம் ஆண்டுக்கு முன்பு பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் முந்தைய பணி காலத்தில் 50% பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 

பொறியாளர்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும். 

கோட்ட வளர்ச்சி அலுவலகத்தை மீண்டும் இயக்க வேண்டும்

தனி நபர் இல்ல கழிவறைக்கு வழங்கும் மானியத்தொகையை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட மகளிர்குழு அமைப்பாளர் ஜம்ருத்நிஷா, வட்டாரத் தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் வளர்மாலா, பொருளாளர் மணிவண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் குணசேகரன், ஊராட்சிச் செயலாளர் சரவண பெருமாள், ஓவர்சீயர் சங்க மாவட்டச் செயலாளர் சுகுமார் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

click me!