புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் கடந்த பத்து நாள்களாக நடைபெற்று வந்த புத்தகத் திருவிழாவில் ரூ. 80 இலட்சம் மதிப்பில் புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளது. இந்த வசூல் கடந்த ஆண்டை விட அதிகம்.
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நவம்பர் 24 முதல் டிசம்பர் 3 வரை புத்தகத் திருவிழா நடைபெற்றது.
பல்வேறு பதிப்பகங்களைச் சேர்ந்த புத்தகங்கள் காட்சிப்படுத்தபப்ட்ட இந்த விழாவில், எழுத்தாளர்கள் பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், ச. தமிழ்ச்செல்வன், பாரதிகிருஷ்ணகுமார், மதுக்கூர் ராமலிங்கம், நந்தலாலா, முத்துநிலவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள், எளிய அறிவியல் பரிசோதனைகள், கற்பித்தல் முறைகள் குறித்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நாள்தோறும், மாணவ, மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த விழாவில், 2016-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சிறந்த புத்தகங்களின் எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்பாளிகளுக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கடந்த பத்து நாள்களாக நடைபெற்று வந்த இந்தப் புத்தகத் திருவிழாவில் புத்தக விற்பனை ரூ.80 இலட்சத்தைத் தாண்டி நடைபெற்றுள்ளது என்று புத்தகத்திருவிழாவின் வரவேற்புக்குழுத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: "கடந்தாண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் 28 அரங்குகள் அமைக்கப்பட்டது. புத்தக விற்பனை ரூ.50 இலட்சத்தை அடைந்தது.
இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் 40 -க்கும் மேற்பட்ட அரங்குகளில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு புத்தக விற்பனை ரூ. 80 இலட்சத்தை எட்டியுள்ளது" என்று கூறினார்.