
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் சீர்வரிசை எடுத்துக்கொண்டு மாப்பிள்ளை வீட்டுக்கு சென்ற மணப் பெண் வீட்டாரின் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே உள்ள அணைமுகத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கும் நெல்லை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
பாபநாசத்தில் நடந்த திருமணத்தில் ராஜேசின் உறவினர்கள் பலர் பங்கேற்றனர். திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதியும், உறவினர்களும் அணைமுகம் வந்தனர். பின்னர், மணப்பெண் வீட்டார், வீடுகாணும் நிகழ்ச்சிக்காக சீர்வரிசையுடன் ஒரு சொகுசு வேனில் வந்தனர். வேனில், குழந்தைகள் உள்பட பலர் இருந்தனர்.
ஆறுகாணி அருகே மலைப்பாதையில் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறிய வேன் மலைப் பாதையில் பெரிய பள்ளத்தில் கவிழ்ந்தது. மலை அடிவாரத்திற்கு உருள்வதற்கு முன்னர் அந்த வேன் இரண்டு மரங்களின் இடையே மாட்டிக்கொண்டது.
வேனில் இருந்தவர்கள் அலறியதால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று வேனுக்குள் இருந்தவர்களை மீட்டனர். இதில் குழந்தைகள் உள்பட 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றனர்.
இந்த விபத்து குறித்து ஆறுகாணி காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.