சிவகங்கை
சிவகங்கையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 65 பேர் காவலாளர்களால் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகர் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சீனிவாசன் தலைமைத் தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "காரைக்குடி கழனிவாசல் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிய அருள்ராஜ் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க வேண்டும்.
பழிவாங்கும் நோக்கத்தோடு பொய் புகார் அளித்த காரைக்குடி வட்டாசியர் மற்றும் துணைவட்டாசியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவகோட்டை சார் ஆட்சியரிடம் வழங்கப்பட்ட மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இதனையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 65 கிராம நிர்வாக அலுவர்கள் காவலாளார்களால் கைது செய்யப்பட்டனர்.