ஆசை ஆசையாய் பள்ளிக்குச் சென்ற 6 வயது சிறுமி அரசுப் பேருந்து மோதி சாவு; தந்தையும் பலியான சோகம்...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 24, 2018, 11:26 AM IST
Highlights

ஆசை ஆசையாய் பள்ளிக்குச் சென்ற 6 வயது சிறுமி மற்றும் தந்தை அரசுப் பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் பேருந்து ஓட்டுநரை கைது செய்தனர்.
 

திருநெல்வேலி

ஆசை ஆசையாய் பள்ளிக்குச் சென்ற 6 வயது சிறுமி மற்றும் தந்தை அரசுப் பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் பேருந்து ஓட்டுநரை கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, சீனிவாச நகரைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன் (34). எலக்ட்ரீசியனான இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், ‌ஷகா (6) மகளும் இருந்தார். பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தின் பக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துவந்தார் ஷகா.

சத்தியநாராயணன் தினமும் தனது பைக்கில் ‌ஷகாவை அழைத்துக்கொண்டு பள்ளியில் விடுவதும், பள்ளி அழைத்து வருவதும் வழக்கம். நேற்று காலை வீட்டில் இருந்து தனது மகள் ‌ஷகாவை பைக்கில் உட்காரவைத்து பள்ளிக்கு அழைத்துச் சென்றார் சத்தியநாராயணன். 

இவர்கள், பாளையங்கோட்டை மாவட்ட மையநூலகத்திற்கு எதிரேவுள்ள சாலையில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்குச் சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்து பைக்கின் மீது அதிபயங்கரமாக மோதியது.

இதில் பேருந்தின் முன்பக்க சக்கரம் பைக்கின் மீது ஏறி இறங்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ‌ஷகா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார் சத்தியநாராயணன். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரௌண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

இவ்விபத்து பற்றி அறிந்த திருநெல்வேலி மாநகரப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலாளர்கள் மற்றும் பாளையங்கோட்டை காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் ஷகாவின் உடலை உடற்கூராய்வுக்காக ஐகிரௌண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். 

இந்தவிபத்து குறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் அரசு பேருந்து ஓட்டுநரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஓட்டுநர் தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையைச் சேர்ந்த பழனிகுமார் (40) என்பது தெரிந்தது

பள்ளிக்குச் சென்ற ஆறு வயது சிறுமியும், தந்தையும் அரசுப் பேருந்து பலியான சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!