சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு... இதையெல்லாம் எடுத்து செல்ல தடை!!

By Narendran SFirst Published Aug 9, 2022, 11:19 PM IST
Highlights

75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாட்டின் 75 ஆவது சுதந்திரதின விழா வரும் 15 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விழா கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக, மத்திய உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளதை அடுத்து விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என மக்கள் அதிகமாக கூடும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்திலும் இந்த பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு முறை நேற்றிரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிடுகின்றனர்.

இதையும் படிங்க: அனைவரும் மெச்சும் வகையில் செஸ் ஒலிம்பியாட்டை தமிழக அரசு நடத்தியுள்ளது... மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

அதேபோல் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் பரிசோதிக்கின்றனர். விமான நிலைய வளகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பார்வையாளர்கள் வருகைக்கான தடை ஏற்கனவே அமலில் இருப்பதால், அதை மேலும் தீவிரமாக செயல்படுத்துகின்றனர். விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஏற்கனவே உள்ள சிசிடிவி கேமராக்களுடன் தற்போது கூடுதலாக சிசிடிவி கேமராக்களை அமைத்து, விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். விமான பயணிகளுக்கும் வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒரு முறை பாதுகாப்பு சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாக பயணிகள் கைகளில் எடுத்து வரும் கைப்பைகள் சோதனை செய்யப்படுகின்றன. மேலும் பயணிகள் திரவ பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா… தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய நடிகர் சிவகார்த்திகேயனின் மகள்!!

அதேப்போல் விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து, பார்சல்கள் அனைத்தையும் பல கட்ட சோதனைக்கு பிறகே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கின்றனர். விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால், உள்நாட்டு பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வருவதற்கு சென்னை விமானநிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும் என்றும், தற்போதைய 5 அடுக்கு பாதுகாப்பு வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் என்றும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.  

click me!