கொடநாடு காவலாளி கொலை வழக்கில் 4 பேரை கைது செய்துள்ளதாகவும், மேலும் 5 பேரை தேடி வருவதாகவும் நீலகிரி எஸ்.பி முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் ஒன்று நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ளது. இந்த எஸ்டேட்டில் காவலாளியாக வேலை பார்த்த ஓம்பகதூர் என்பவர் கடந்த 23 ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
அப்போது கிஷன் பகதூர் என்ற காவலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக நீலகிரி, எஸ்.பி., முரளி ரம்பா தலைமையில், ஐந்து, டி.எஸ்.பி.,க்கள் அடங்கிய ஐந்து தனிப்படை போலீசார், 10 குழுக்களாக பிரிந்து, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில், தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வழக்கில், முதல் துருப்பாக கிடைத்த, ஒரு மொபைல் போன், கையுறைகள், ரத்தக் கறைகள், சி.சி.டி.வி, கேமரா பதிவுகள் ஆகியவற்றை கொண்டு, மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், பல முக்கிய தகவல்கள் கிடைத்தன.
இந்த வழக்கு சம்பந்தமாக கனகராஜ், சயான் ஆகியோரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் என்பவர் இன்று காலை சேலம் அருகே கார் விபத்தில் உயிரிழந்தார்.
அதேபோல், சயான் காரின் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்தார். மேலும் காரில் இருந்த அவரது மனைவியும் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சயான் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை கேரள போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :
ஓம்பகதூர் கொலையில் தீபு, சதீசன், சந்தோஷ், உதயகுமார் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளோம்.
மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகிறோம்.
ஓம்பகதூரை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
விபத்தில் இறந்த கனகராஜ், மற்றும் சயான் ஆகியோர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள்.
நகை பணம் கொள்ளையடிக்க இத்தகைய கொலை அரங்கேறி உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.