300 உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகள் எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்படும் எனவும், 1,575 பொறியாளர்கள், கணக்கீட்டாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும், சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற்று வருகிறது.
கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து திமுக வெளிநடப்பு செய்து வருகிறது. இதையடுத்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மானிய கோரிக்கை குறித்து பேசினார். அப்போது, 300 உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகள் எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்படும் என தெரிவித்தார்.
1,575 பொறியாளர்கள், கணக்கீட்டாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அலுவலக குடியிருப்புகள் கட்டப்படும் எனவும் குறிப்பிட்டார்.
சூரிய சக்தி மின் அழுத்த பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் உயர்த்தி வழங்கபடும் எனவும், மது பழக்கத்திற்கு எதிராக பரப்புரைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.
சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு திருந்தியவர்கள் மறுவாழ்வுக்காக 5 கோடி ரூபாய் நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கிராமத்திலேயே கிடைக்கும் நிலையான மின் சக்தியை கொண்டு அம்மா பசுமை கிராமம் கொண்டுவரப்படும் எனவும், விரைவு விவசாய மின் இணைப்பு வழங்கல் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் பேரவையில் அமைச்சர் குறிபிட்டார்.
மேலும், அலைபேசியில் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
நீராவில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்யவும் உரிமம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தங்கமணி சட்டபேரவையில் தெரிவித்தார்.