துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர் அடுத்தடுத்து கொடூர கொலை!

First Published Nov 24, 2017, 12:38 PM IST
Highlights
3 killed in clean sweepers


திண்டுக்கல், நெட்டு தெருவை சேர்ந்தவர் குருசாமி. அவரது மகன்கள் பில்லி வீரா (எ) மதுரை வீரன் (39), சரவணன் (37), மற்றும் பாலமுருகன் (45) இவர்கள் மூன்று பேரும் துப்புரவு தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

 

பாலமுருகன் இன்று காலை துப்புரவு வண்டியுடன் பணிக்கு சென்றார். சிலுவத்தூர் சாலையில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம கும்பல் பாலமுருகனை கீழே தள்ளி அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நாகல் நகர், பாவா லாட்ஜ் பகுதியில் துப்புரவு பணியில் மதுரை வீரன் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு  மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் ரத்த வெள்ளத்தில் மதுரை வீரன் பிணமானார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்,

மதுரை வீரனின் தம்பி சரவணன், என்.வி.ஜி.பி. தியேட்டர் சாலையில் துப்புரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரையும் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடியது. இதில் சரவணன், பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து கொல்லப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் பள்ளி-கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த நேரத்திலும், அலுவலகத்துக்கு பணியாளர்கள் சென்று கொண்டிருந்த நேரத்திலும் இந்த கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உடல்களைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.  கடந்த ஆண்டு, சோமு என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வீரா, சரவணன், பாலமுருகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பி உள்பட 3 பேர் அடுத்தடுத்து வெட்டி கொலை செய்யப்பட்டதால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவர்களது உறவினர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் மருத்துவமனை வளாகமே மிகுந்த பரபரப்புக்கு உள்ளானது. 

click me!