கோயம்புத்தூர்
உக்கடம் பகுதியில் 209 குடியிருப்புகளை இடித்து தள்ளிவிட்டு மேம்பாலம் கட்டப்பட இருப்பதால் வீடுகளை காலி செய்ய கெடு கொடுத்துள்ளது கோவை நகராட்சி.
கோயம்புத்தூர் மாவட்டம், உக்கடம் பகுதியில் நிலவிவரும் கடும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க ஆத்துப்பாலம் முதல் உக்கடம் பேருந்து நிலையம் வரை மேம்பாலம் கட்டப்பட இருக்கிறது. இதற்காக உக்கடம் பேருந்து நிலையம் முன்பு ரௌண்டானா அமைக்கப்பட உள்ளது.
இதற்காக பேரூர் பைபாஸ் சாலையில் உள்ள பழைய மீன் சந்தை, பழக்கடை சந்தை போன்றவற்றை காலி செய்துவிட்டனர் அதிகாரிகள். பழக்கடைகளுக்கு கழிவுநீர் பண்ணை அருகே புதிதாக கடைகள் கட்டப்பட்டு வருகின்றன.
மேலும், பேரூர் பைபாஸ் சாலையில் உள்ள வீடுகளையும் காலிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அங்கு குடியிருக்கும் 209 குடும்பத்தினருக்கும் மலுமிச்சம்பட்டியில் மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்கள் யாரும் அங்கு செல்ல விரும்பவில்லை.
இந்த நிலையில், கோயம்புத்தூர் மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் ஊழியர்கள் பேரூர் பைபாஸ் சாலையில் உள்ள வீடுகளில் சுற்றறிக்கை ஒட்டினார்கள்.
அதில், "ஆத்துப்பாலத்தில் இருந்து உக்கடம் வரை புதிதாக மேம்பாலம் கட்டப்படவுள்ளதால் பேரூர் பைபாஸ் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க வேண்டியுள்ளது.
எனவே, அந்த வீடுகளை காலி செய்ய வேண்டும். மேலும், அவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் மலுமிச்சம்பட்டியில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த அறிவிப்பு கிடைத்த 15 நாட்களுக்குள் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை காலி செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விதிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் காலி செய்யாதபட்சத்தில் மாநகராட்சி சட்ட விதிமுறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை கோயம்புத்தூர் மாநகராட்சி தனி அதிகாரி பிறப்பித்துள்ளார்.