
தமிழகம், புதுவையில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 3,119 மையங்களில் இன்று தொடங்குகிறது. இந்தத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர்.கடந்த மார்ச் 2 ஆம் தேதி 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன் 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெறகிறது. அதே போல், 11 ஆம் வகுப்புக்கு மே 9 ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரையும் 10 ஆம் வகுப்புக்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன. அதன்படி, இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு தொடங்குகிறது.
ஆசிரியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8 மணிக்கு வர வேண்டும். மாணவர்கள் காலை 9 மணிக்கு வந்தால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.45 மணிக்கு முதல் மணி ஒரு முறை அடிக்கப்படும். அப்போது, தேர்வர்கள் தேர்வறைக்கு வர வேண்டும். 9.55 மணிக்கு இரண்டாவது மணி 2 முறை அடிக்கப்படும்.
அப்போது, அறைக் கண்காணிப்பாளர் வினாத்தாள் உறைகளை மாணவர்களிடம் காண்பித்து, இரு மாணவர்களிடம் கையெழுத்து பெற்று, உறைகள் பிரிக்கப்படும். காலை 10 மணிக்கு மூன்றாவது மணி 3 முறை அடிக்கப்படும். அப்போது,
மாணவர்களுக்குத் தேர்வுத் தாள் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
காலை 10 மணி முதல் பகல் 1.15 மணி வரை தேர்வுகள் நடைபெறும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும். தேர்வையொட்டி அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகளில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுதத் தடை விதிக்கப்படும்.
தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால், அடுத்து தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள்
இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்வறைக்குள் செல்போன் போன்ற மின்சாதனங்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. விடைத்தாளில் எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாக்களால் எழுதக் கூடாது . பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 28 வரை நடைபெறவுள்ளது.