திருவாரூர்
வருடாந்திர ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்று திருவாரூரில் 108 அவசர ஊர்தி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர் மாவட்ட பேருந்து நிலையம் அருகில் 108 அவசர ஊர்தி பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஐயப்பன் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட செயலாளர் சக்திவேல், திருவாரூர் மாவட்ட பொருளாளர் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை மண்டல பொருளாளர் பாஸ்கர், மதுரை மண்டல பொதுக்குழு உறுப்பினர் வள்ளல் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "108 அவசர ஊர்தி தொழிலாளர்களுக்கு தமிழக அரசு வருடாந்திர ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.
வாகனங்களில் ஏற்படும் கோளாறுகளை உடனுக்குடன் சரி செய்து மக்களுக்கான சேவை தடைபடாமல் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.
ஈட்டிய விடுப்புக்கான பணத்தை தொழிலாளர்களுக்கு முறையாக வழங்க வேண்டும்.
தொழிலாளர் சம்பளம், வாகன பராமரிப்பு போன்ற பல்வேறு வகையில் முறைகேடுகளை தடுத்திட வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட செய்தி தொடர்பாளர் கலையமுதன் நன்றி தெரிவித்தார்.