விழுப்புரத்தில் மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்.. போலீஸ் வலைவீச்சு

By karthikeyan VFirst Published Apr 8, 2020, 8:11 PM IST
Highlights

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்த நபர் ஒருவர் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 

கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டிவருகிறது. தமிழ்நாட்டில் நேற்றுவரை  கொரோனா பாதிப்பு 690ஆக இருந்தது. இன்று மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 738ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடுதான் கொரோனா பாதிப்பில் இரண்டாமிடத்தில் உள்ளது. கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு, கடுமையாக உழைத்துவரும் நிலையில் சிலர் ஒத்துழைப்பு கொடுக்காமல் அலட்சியமாகவும் சமூக பொறுப்பின்றியும் நடந்துகொள்கின்றனர்.

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள தனிமைப்படுதலும் சமூக விலகலுமே ஒரே வழி என்பதால், மக்களின் பாதுகாப்பிற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், சிலர் காரணமே இல்லாமல் சமூக பொறுப்பின்றி பொதுவெளியில் சுற்றித்திரிகின்றனர். அவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்,

இந்நிலையில், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 30 வயது இளைஞர் ஒருவர் மருத்துவமனையிலிருந்து தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய நபரை போலீஸார் வலைவீசி தேடிவருகின்றனர். 

கொரோனா சமூக தொற்றாக பரவிவிடக்கூடாது என்பதற்காக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதாரத்துறை தேடித்தேடி பரிசோதனைகளை மேற்கொண்டும் கண்காணித்தும் வரும் நிலையில், கொரோனா நோயாளி ஒருவர் அசால்ட்டாக, யாரை பற்றியும் கவலப்படாமல் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும் போலீஸார் அவரை விரைவில் பிடித்துவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
 

click me!