அட கடவுளே.. ஆம்புலன்ஸ் டயர் வெடித்து விபத்து.. பிரசவத்திற்கு சென்ற நிறைமாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி..!

By vinoth kumarFirst Published Jun 10, 2021, 10:12 AM IST
Highlights

ஆம்புலன்ஸ் ஆலத்தூர் ஏரிக்கரை அருகே வந்த போது திடீரென டயர் வெடித்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் தாறுமாறாக ஓடி மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆம்புலன்ஸ் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் நிறைமாத கர்ப்பிணியான ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

கள்ளக்குறிச்சி அருகே மரத்தின் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மனைவி ஜெயலட்சுமி (23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று அதிகாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சை அழைத்துள்ளனர். அங்கு உடனடியாக வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயலெட்சுமி மற்றும் அவரது மாமியார் மற்றும் அவரது நாத்தனார் என 3 பேரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

அப்போது, ஆம்புலன்ஸ் ஆலத்தூர் ஏரிக்கரை அருகே வந்த போது திடீரென டயர் வெடித்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் தாறுமாறாக ஓடி மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆம்புலன்ஸ் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் நிறைமாத கர்ப்பிணியான ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த 4 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால், வரும் வழியிலேயே ஜெயலட்சுமியின் மாமியார் செல்வி மற்றும் நாத்தனார் ஆகிய இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஆம்புலன்ஸ் டிரைவர் கமற்றும் மருத்துவ உதவியாளர் ஆகிய இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்புலன்ஸ் விபத்தில் நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

click me!