ஒருதலை காதல்.. மாணவிக்கு 14 இடங்களில் கத்திக்குத்து.. தலைமறைவான இளைஞரை தேடிய போலீஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி

By vinoth kumarFirst Published Jun 1, 2022, 11:06 AM IST
Highlights

இது தொடர்பாக கேசவனின் தந்தைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அவர் வந்து பார்த்து விட்டு இறந்தவர் கேசவன் தான் என்பதை உறுதி செய்ததை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மணப்பாறையில் 11ம் வகுப்பு பள்ளி மாணவியை 14 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பிய இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர், திண்டுக்கல் ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று கடைசி தேர்வு முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, அவரை வழிமறித்து காதலை ஏற்கும் படி இளைஞர் கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் அந்த பெண்ணை சரமாரியாக 14 இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பித்துவிட்டார். 

ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கத்தியால் குத்தியவர் பொத்தமேட்டுப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த கேசவன் (22) என்பதும் ஏற்கனவே அந்த மாணவியை கடத்திச் சென்றது தொடர்பாக மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு கேசவன் மற்றும் அவரது பெற்றோர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதும் இந்த வழக்கு தற்போது திருச்சி மகிலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதும் தெரியவந்தது.

இந்நிலையில், தான் நேற்று மீண்டும் மாணவியை சந்தித்த கேசவன் மாணவியுடன் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர். அப்போது மாணவி கத்தியால் குத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழே பூசரிப்பட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடைப்பதாக வந்த தகவலை அடுத்து திருச்சி ரயில்வே போலீசார் மற்றும் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கிருந்த மக்கள் இறந்தவர் கேசவன் என்பதை உறுதி செய்தனர். 

மேலும் இது தொடர்பாக கேசவனின் தந்தைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அவர் வந்து பார்த்து விட்டு இறந்தவர் கேசவன் தான் என்பதை உறுதி செய்ததை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக திருச்சி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியை கத்தியால் குத்திவிட்டு ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

click me!