Government Bus: அரசுப் பேருந்தில் இருந்து இருக்கையோடு சாலையில் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அமைச்சர் விளக்கம்

By Velmurugan sFirst Published Apr 25, 2024, 2:20 PM IST
Highlights

திருச்சியில் அரசு நகரப் பேருந்தில் இருந்து நடத்துநர் இருக்கையோடு சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில், இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சி கே.கே.நகர் நோக்கி நேற்று மதியம் அரசு நகரப் பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்டினார். நடத்துநராக திருச்சி எடமலைபட்டிபுதூரை சேர்ந்த முருகேசன் (54) பணியாற்றினார். பிற்பகல் 3.30 மணி அளவில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து கலையரங்கம் தியேட்டரை கடந்து சென்றது. பேருந்தில் பயணிகள் அதிகம் இல்லாததால் கடைசியில் இருந்து வலது புறத்தில் உள்ள மூன்றாவது இருக்கையில் நடத்துனர் முருகேசன் அமர்ந்திருந்தார்.

திருச்சி நகரப் பேருந்துகளில் நடத்துநருக்கு என்று தனி இருக்கை கிடையாது. அந்த பேருந்து கலையரங்கம் தியேட்டரை கடந்து பத்திரிகை அலுவலகம் அருகே வலது புறம் திரும்பியது. அப்போது நடத்துநர் முருகேசன் அமர்ந்திருந்த இருக்கை திடீரென உடைந்து படிக்கட்டு வழியாக சாலையில் வந்து விழுந்தது. இதில் இருக்கையில் அமர்ந்திருந்த நடத்துநர் முருகேசன் சாலையில் தூக்கி வீசப்பட்டார். கீழே விழுந்ததில் முருகேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மகனை மரத்தில் கட்டிவைத்து அடித்தே கொன்ற தந்தை; மனைவியின் பேச்சை கேட்டு நடந்ததால் ஆத்திரம்

பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி இறங்கி வந்து பார்த்தனர். காயமடைந்த நடத்துநர் முருகேசனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உடைந்து சாலையில் விழுந்து கிடந்த இருக்கையை தூக்கி பேருந்தில் வைத்துக் கொண்டு மீண்டும் பேருந்து புறப்பட்டு சென்றது. இதில் வந்த பயணிகள் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு பேருந்தில் இருக்கை கழண்டு வெளியில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

என் கர்ப்பத்திற்கு அந்த போலீஸ் தான் காரணம்; திருமணத்தை மீறிய உறவை சுட்டிகாட்டி காவல் நிலையம் முன் பெண் தர்ணா

இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இது தொடர்பாக கூறுகையில், அது 13 ஆண்டுகள் பழமையான பேருந்து. கடந்த அதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யாததால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது 7 ஆயிரம் பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டு முதல் கட்டமாக 350 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. படிப்படியாக இந்த ஆண்டுக்குள் பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.

click me!