வெள்ளிக்கிழமை தொழுகைக்கு நூற்றுக்கணக்கில் திரண்ட இஸ்லாமியர்கள்..! போலீசுடன் தகராறு..!

By Manikandan S R SFirst Published Apr 4, 2020, 10:44 AM IST
Highlights

பள்ளிவாசலுக்கு சென்று தொழுகைக்காக கூடி இருந்தவர்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் இவ்வாறு கூட்டமாக கூடக் கூடாது என்றும் உடனடியாக கலைந்து செல்லுமாறு போலீசார் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு அங்கிருந்தவர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி இருக்க அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் அன்றி பிற காரணங்களுக்காக எக்காரணம் கொண்டும் மக்கள் வெளிவரக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் இருக்கும் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் ஆகியவையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த திரண்ட இஸ்லாமியர்களால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிற்து. தென்காசி மாவட்டம் நடுப்பேட்டையில் பள்ளிவாசல் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக மதியம் ஒரு மணி அளவில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்றாக திரண்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே சம்பவ இடத்திற்கு உடனடியாக போலீசார் விரைந்தனர்.

அங்கு பள்ளிவாசலுக்கு சென்று தொழுகைக்காக கூடி இருந்தவர்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் இவ்வாறு கூட்டமாக கூடக் கூடாது என்றும் உடனடியாக கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் அதற்கு அங்கிருந்தவர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது .இதனால் போலீசாருக்கும் தொழுகை நடத்த திரண்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திடீரென போலீசார் மீது நாற்காலிகள் வீசப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கூட்டத்தை கலைப்பதற்காக லேசான தடியடி நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு திரண்டிருந்தவர்களை எச்சரித்த போலீசார் உடனடியாக கலைந்து போகச் செய்தனர். இந்த சம்பவத்தில் போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்து இரண்டு காவலர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இது தொடர்பாக 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கும் போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

click me!