தஞ்சை கால்நடை கல்லூரிக்குள் புகுந்த கொரோனா... ஒரே நாளில் இத்தனை மாணவர்களுக்கு தொற்றா?

By Kanimozhi PannerselvamFirst Published Mar 25, 2021, 11:27 AM IST
Highlights

பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போது மாணவர்களுக்கு நடைபெற்று வரும் கொரோனா பரிசோதனைகள் மூலமாக நாளுக்கு நாள் தொற்று அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றிலிருந்து மாணவ, மாணவிகளை பாதுகாக்கும் விதமாக கடந்த 22ம் தேதி முதல் 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு காரணமாக 12ம் வகுப்பிற்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படவில்லை. அதேபோல் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களை தவிர பிறர் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் படிக்கலாம் என்றும், கல்லூரிக்கு வர வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போது மாணவர்களுக்கு நடைபெற்று வரும் கொரோனா பரிசோதனைகள் மூலமாக நாளுக்கு நாள் தொற்று அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. குறிப்பாக தஞ்சையில் உள்ள அம்மாபேட்டை அரசு உதவி பெறும் மகளிர் பள்ளியில் மாணவிகள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். இதைதொடர்ந்து படிப்படியாக மற்ற பள்ளி, கல்லூரிகளில் கொரோனா பரவி வந்தது. நேற்று வரை 13 பள்ளிகளைச் சேர்ந்த 185 மாணவர்கள், 3 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் 18 பேர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட  205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதில் நேற்றையை நிலவரப்படி 115 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மாணவர்களிடையே அடுத்தடுத்து தொற்று பரவி வருவதால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தீவிர கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று காலை வந்த முடிவுகளின் படி ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை கல்லூரியில் புதிதாக 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இக்கல்லூரி மாணவர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!